திருச்செந்தூரில் நாளை விசாகத் திருவிழா
6/6/2025 4:00:24 PM
திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இதில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலத்துடன் நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் உச்சிக்கால தீபாராதனை முடிந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை சென்றடைதலும், இதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்து வந்தது. மேலும் சுவாமி, அம்பாள் 11 முறை வசந்த மண்டபத்தை சுற்றி வந்து தங்கத்தேரில் எழுந்தருளி கோயிலை வந்தடைந்ததும் சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. இந்நிலையில் விழாவின் முத்தாய்ப்பான வைகாசி விசாகத் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று (6ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாவை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.