ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு: மக்கள் கடும் அவதி
6/6/2025 3:51:53 PM
திருச்சி: கடந்த நவம்பர் 8ம் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அறிவித்தது முதல் 2 நாட்களுக்கு அனைத்து ஏடிஎம்களும் மூடப்பட்டன. தங்களிடமிருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் வங்கிகளில் குவிந்தனர். அதேசமயம் புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது. இதனால் மக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவினாலும், சில்லரை தட்டுப்பாடு அதிகரித்தது. பின்னர் ஏடிஎம்கள் படிப்படியாக செயல்பட துவங்கின. ஆனால் ஒரு நாளைக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஏடிஎம்களிலும் மக்கள் கியூவில் காத்து நின்றனர். கிட்டத்தட்ட 2 மாதம் இதே நிலை நீடித்ததால், மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். படிப்படியாக பணத்தட்டுப்பாடு குறைந்து, ஏடிஎம்கள் வழக்கமான செயல்பாட்டுக்கு வந்தன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.
திருச்சி: திருச்சியில் மத்திய பஸ் நிலையம், கண்டோன்மென்ட், சத்திரம் பஸ் நிலையம், உறையூர் மற்றும் ரங்கம் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள அரசுடைமை வங்கி ஏடிஎம்களில் கடந்த 2 நாட்களாக தேவைக்கேற்ப பணம் வைக்கப்படாத காரணத்தால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
கரூர், தஞ்சை: கரூர் நகரம், தாந்தோணிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், காந்திகிராமம் பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களிலும் மக்கள் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏடிஎம்களில் பணம் இல்லாத நிலையே நீடிக்கிறது. தஞ்சையில் முக்கிய இடங்களாக கருதப்படும் ஆர்எம்எச் ரோடு, தெற்கு வீதியில் உள்ள ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளன.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லாத சூழ்நிலையே எப்போது நீடிக்கும், கடந்த 2 நாட்களாக அனைத்து ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நீடித்தது. புதுகை, நாகை, திருவாரூர்: புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு நிலவியது. இதே நிலையே நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் நீடிக்கிறது. ஏடிஎம் பணத்தட்டுப்பாட்டை உடனடியாக நீக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.