சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடியது: ராகுலை தலைவராக்குவது குறித்து ஆலோசனை
6/6/2025 3:40:42 PM
புதுடெல்லி: ராகுலை தலைவராக்குவது, ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி சோனியா தலைமையில் டெல்லியில் இன்று கூடியது. ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் வர உள்ள நிலையில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைமையில் கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. இதையொட்டி எதிர்கட்சி தலைவர்கள் சோனியாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினர். இதற்கிடையில் நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடு விற்பனைக்கு தடை உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான அரசியல் சூழல் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. உத்தரபிரதேச, உத்தரகண்ட் தேர்தல் தோல்விக்கு பிறகு முதன்முறையாக இப்போதுதான் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது. எனவே 5 மாநிலங்களில் காங்கிரசின் தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் ஆராயப்படும் மேலும் பீகார் மாடலில் அடுத்து வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் பாஜவுக்கு எதிரான மெகா கூட்டணி ஒன்றை அமைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. அதே வேளையில் ராகுலை தலைவராக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 1998ம் ஆண்டு நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தின் போது அப்போது தலைவராக இருந்த சீதாராம் கேசரி நீக்கப்பட்டார். இதையடுத்து சோனியா தலைவராக்கப்பட்டார். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சோனியா அந்த பொறுப்பில் நீடித்து வருகிறார். கடந்த 2013ல் ராகுல் துணை தலைவராக்கப்பட்டார். கடந்த லோக்சபா தேர்தலின் பிரசாரத்தின் போது சோனியா உடல் குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது முதல் ராகுல் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூடியது. அப்போது மூத்த தலைவர்களான மன்மோகன் சிங், அந்தோணி உள்ளிட்டோர் ராகுலை தலைவராக்க வேண்டும் என வலியுறுத்தினர். தற்போது ஜனாதிபதி தேர்தல் வர உள்ள சூழலில் எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது. இந்த சூழலில் இன்று டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடியுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு சோனியா இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல், ஏ.கே.அந்தோணி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி நடைமுறைகளின்படி சோனியா பதவி காலம் முடிவடைவதையொட்டி வருகிற அக்டோபர் 15ம் தேதி அடுத்த காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என தெரிகிறது. எனவே அது தொடர்பாக இன்று நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என தெரிகிறது. மேலும் இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல், ராகுல் தலைமை பொறுப்பு ஏற்பது, லோக்சபா தேர்தல் வியூகம், மாட்டிறைச்சி விவகாரம் உள்ளிட்ட தேசிய அளவிலான பல்வேறு முக்கிய அரசியல் அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.