தினமும் ரூ.500 வருமானம்’ சுவிங்கம் ஓட்டி உண்டியலில் பணத்தை திருடிய வாலிபர்
6/5/2025 3:40:27 PM
அரக்கோணம்: அரக்கோணத்தில் சுவிங்கம் மூலம் சர்ச்சில் இருந்த உண்டியலில் காணிக்கை பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இங்குள்ள காணிக்கை உண்டியல் அருகே நேற்று மாலை வாலிபர் ஒருவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தாராம். இதை வாட்ச்மேன் பவகரணன் பார்த்துள்ளார். அவர் அங்கு சென்றபோது உண்டியல் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் சுவிங்கத்தை குச்சியில் சுற்றி உண்டியலில் இருந்து பணத்தை திருடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து அரக்கோணம் டவுன் போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதில் அவர், திருவள்ளுவர் அருகே உள்ள செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அக்னல் ஆரோக்கியராஜ்(36) என்பது தெரிய வந்தது. மேலும் அவர், தான் டீக்கடையில் வேலை செய்து வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு, தினந்தோறும் செவ்வாப்பேட்டையில் இருந்து அரக்கோணத்திற்கு ரயில் மூலம் வந்து, இதுபோன்று நூதன முறையில் திருடுவேன்.
இவ்வாறு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.500ஐ உண்டியலிருந்து திருடி ரூ.250ஐ தான் செலவு செய்து வருவதாகவும், மீதமுள்ள 250ஐ மனைவியிடம் கொடுத்து வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். சினிமா படத்தில் வருவது போல் அவர் நூதன முறையில் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.