குடிபோதையில் வந்ததால் தந்தை சரமாரி அடித்துக்கொலை : போலீசில் மகன் சரணடைந்தார்
6/5/2025 3:34:32 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் மதனபாளையம் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (45). இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு சந்தோஷ்குமார் (21) என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். கண்ணன் வேலை முடிந்ததும் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் தந்தை, மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. நேற்று கண்ணன் குடிபோதையில் தள்ளாடியபடி வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த சந்தோஷ்குமார், தந்தையை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தந்தை கண்ணின் தலையில் சரமாரி தாக்கியுள்ளார். மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தி விழுந்த கண்ணன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, சந்தோஷ்குமார் நேராக சிவகாஞ்சி காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுபற்றி சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குடி பிரச்னையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.