எஸ்பிஐ வங்கியில் ஏடிஎம், பரிவர்த்தனை : கட்டணங்கள் திடீர் மாற்றி அமைப்பு
6/5/2025 3:32:04 PM
மும்பை: பாரத ஸ்டேட் வங்கி பரிவர்த்தனைக்கான கட்டணங்களை புதிதாக மாற்றி அமைத்து அறிவித்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை கடந்த 1ம் தேதி முதல் மாற்றி அமைத்து அறிவித்துள்ளது. அதிக வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியான எஸ்பிஐ அண்மையில் சேமிப்பு கணக்கில் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரத்தை வைத்திருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இது பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் இந்த ஜூன் 1ம் தேதி முதல் சேவை மற்றும் பரிவர்த்தனைக்கான கட்டணங்களை மாற்றி அமைத்து அறிவித்துள்ளது. ஏடிஎம் சேவையை பயன்படுத்தி எஸ்பிஐயின் மொபைல் வாலெட்டுக்கு பண பரிமாற்றம் செய்யும் போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும். இருந்த போதிலும் சேமிப்பு கணக்கில் இருந்து ஏடிஎம் சேவையை பயன்படுத்தி மெட்ரோ நகரங்களில் ஒரு மாதத்திற்கு 8 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.
5 முறை சொந்த வங்கி ஏடிஎம்மிலும், 3 முறை பிற வங்கி ஏடிஎம்மிலும் இதை பயன்படுத்தி கொள்ள முடியும். பிற நகரங்களில் 10 முறை இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட அடிப்படை சேமிப்பு கணக்கில் இருந்து ஏடிஎம் சேவையை ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே போல் ஆன்லைன், காசோலை, பணம் எடுத்தல், செலுத்துல், பிற கணக்குகளுக்கு தொகையை மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் கட்டணத்தை மாற்றி எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.