கோவையில் 4 பேரை கொன்ற யானை டாப்சிலிப் வனத்தில் விடுவிப்பு
6/3/2025 5:18:12 PM
பொள்ளாச்சி: கோவையில் 4 பேரை கொன்று பிடிபட்ட யானை, லாரியில் கொண்டு செல்லப்பட்டு டாப்சிலிப் வனத்தில் விடுவிக்கப்பட்டது.கோவை எட்டிமடை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை போத்தனூர் கணேசபுரம் மூரண்டம்மன் கோயில் வீதியில் நேற்று அதிகாலை புகுந்தது.அங்கு வீட்டு வாசலில் படுத்து தூங்கிய விஜயகுமார், மகள் காயத்ரி(12) ஆகியோரை தாக்கியது. படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் சிறுமி காயத்ரி பரிதாபமாக இறந்தாள். காலை 5.30 மணிக்கு வெள்ளலூர் பஜனை கோயில் வீதியில் புகுந்த யானை, அங்கு வாக்கிங் சென்ற பாலசுப்ரமணியம் மனைவி நாகரத்தினம்(50), மாரியப்பன் மனைவி ஜோதிமணி(60) ஆகியோரை மிதித்து கொன்றது.
அங்கிருந்து வெள்ளலூர் மொட்டுக்கடை ஓடை பகுதிக்கு சென்ற யானை அங்கும் நாகராஜ் என்பவரை துரத்தி தாக்கியது. பின்னர் குப்பணகவுண்டர் தோட்டத்திற்குள் புகுந்து விவசாயி பழனிசாமி(73)யை தூக்கி வீசி கொன்றது.யானை 4 பேரை கொன்ற தகவல் வெளியானதும், கோவை நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர், போலீஸ் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு ஓடையில் பதுங்கி நின்ற யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மதியம் 2.40 மணிக்கு சாடிவயல் கும்கி யானை பாரி உதவியுடன், காட்டு யானை லாரியில் ஏற்றப்பட்டது. இந்த யானையை வனத்தில் விடுவிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.பின்னர், டாப்சிலிப் புறப்பட்ட யானைக்கு இரவு 7.15 மணியளவில் சேத்துமடை எடைமேடையில் எடை பரிசோதனை செய்யப்பட்டது. யானையை குளிர்விக்க உடல்முழுவதும் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. 8 மணிக்கு டாப்சிலிப் வந்த யானை, அங்கிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள யானைகுன்று பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
நள்ளிரவு 11.30 மணியளவில், அடர்வனத்தில் லாரி நிறுத்தப்பட்டு பின்கதவு திறக்கப்பட்டது. மயக்கம் தெளிந்திருந்த காட்டு யானை, லாரியில் இருந்து இறங்கியது. தயாராக நின்ற டாப்சிலிப் கும்கிகள் சலீமும், ராமும் அந்த யானையை தள்ளிவிட்டு வனத்துக்குள் போக வைத்தன. சிறிது நேரத்தில் காட்டு யானை வனத்துக்குள் சென்றுவிட்டது. இதை உறுதி செய்தபின், வனத்துறை டாக்டர் மனோகரன், வனச்சரகர் ரவிச்சந்திரன் மற்றும் குழுவினர் டாப்சிலிப் திரும்பினர்.வனத்துக்குள் சென்ற யானை மீண்டும் திரும்பி வருகிறதா என்பதை கண்காணிக்க வனச்சரகர் கிருஷ்ணசாமி தலைமையில் வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட 10பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 15 நாட்களுக்கு இரவு பகலாக கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.