தங்கம் பவுனுக்கு 248 உயர்ந்தது
6/3/2025 5:16:27 PM
சென்னை : தங்கம் விலை கடந்த மாதம் ஏற்றம், இறக்கத்தில் காணப்பட்டது. மேலும், திடீரென விலை உயர்வதும், குறைவதுமான போக்கும் காணப்பட்டது. இந்த நிலையில், இந்த மாதம் 1ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.22,272க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.22,176க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை கடுமையாக உயந்தது. கிராமுக்கு ரூ.31 அதிகரித்து ஒரு கிராம் ரூ.2,803க்கும், பவுனுக்கு ரூ.248 உயர்ந்து ஒரு பவுன் ரூ.22,424க்கும் விற்பனையானது.
ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுபமுகூர்த்த தினங்களில் அதிக அளவில் நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்ந்துள்ளது பெற்றோர்களையும் கவலையடைய செய்துள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. இதனால், இன்றைய விலையிலேயே தங்கம் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சென்னை வைரம், தங்கம் வியாபாரிகள் சங்க செயலாளர் சாந்தகுமார்,” ஜி.எஸ்.டி. வரியால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று டெல்லியில் ஜி.எஸ்.டி. கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவை பொறுத்து தங்கம் விலை உயருமா? அல்லது குறையுமா? என்பது தெரியவரும். ஜி.எஸ்.டி. வரி உயர்ந்தால் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது” என்றார்.