டெல்லி ஐஐடியில் ஆராய்ச்சி மாணவி தற்கொலை
6/1/2025 5:06:43 PM
புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் மஞ்சுளா 28. பிஇ பட்டப் படிப்பு முடித்து விட்டு அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தார். பின்னர் 2013ம் ஆண்டு ரித்தேஷ் விர்ஹா என்பவரை திருமணம் செய்துகொண்டு இந்தூரில் வசித்து வந்தார். இதனிடையே டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி.யில் ஆராய்ச்சி படிப்பில் மஞ்சுளா சேர்ந்தார். அங்குள்ள விடுதியில் அவர் தங்கி இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருடைய அறையில் தூக்கில் தொங்குவதை ஜன்னல் வழியாக சக மாணவிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். அப்போது உள்பக்கமாக கதவு தாழிடப்பட்டு இருந்தது. இதனால் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர்.பின்னர் மஞ்சுளாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய தற்கொலைக்கு மன அழுத்தம் காரணமா? அல்லது குடும்ப பிரச்னை காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருகிறது. ஆசிரியர்கள் நெருக்கடியா அல்லது சகமாணவர்கள் நெருக்கடியால் தற்கொலை நிகழ்கிறதா என்பது புரியாத புதிராக உள்ளது.