செங்குன்றம், சோழவரம் பகுதிகளில் கஞ்சா, அபின் விற்பனை அமோகம்
5/31/2017 3:20:54 PM
புழல்: செங்குன்றம் அடுத்த ஆலமரம் பகுதி, பாலகணேசன் நகர், பாடியநல்லூர், காந்தி நகர், நாகாத்தம்மன் நகர், பெருமாள் அடிபாதம், எடப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பைக் மற்றும் சைக்கிள்கள் மூலம் கஞ்சா, அபின் உள்பட பல்வேறு போதை பொருட்கள் விற்கப்படுகின்றன.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட செங்குன்றம், சோழவரம் காவல் நிலையங்களில் புகார்கள் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், இப்பகுதிகளில் கண்துடைப்புக்காக கஞ்சா கடத்தல் தொடர்பாக ஒருசிலரை போலீசார் கைது செய்கின்றனர். எனினும், அப்பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் இருசக்கர வாகனங்கள் மூலம் விற்கப்பட்டு வருகின்றன. எனவே, போதை பொருட்களை பறிமுதல் செய்யவும் அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்பவர்களை கைது செய்து, இப்பகுதிகளில் மீண்டும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.