மகேந்திரா சிட்டியில் உள்ள நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் அடித்துகொலை? : போலீசில் மனைவி பரபரப்பு புகார்
5/31/2017 3:20:00 PM
செங்கல்பட்டு: மகேந்திரா சிட்டியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றிவந்த இன்ஜினியர் மர்மமான முறையில் இறந்தார். அவரை யாராவது அடித்துக்கொன்றார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த மயிலம் சாலையை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மகன் இளையராஜா (35). இவர் செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றினார். கம்பெனிக்கு சொந்தமான அறையில் தங்கியிருந்தார். இவரது மனைவி ரேவதி. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 26ம் தேதி வேலையை முடித்துவிட்டு இளையராஜா, சொந்த ஊருக்கு சென்றார். அங்கு 2 நாட்கள் இருந்துவிட்டு அங்கிருந்த நேற்று முன்தினம், மகேந்திராசிட்டிக்கு வந்தார். மாலையில் வேலை முடிந்ததும் தனது அறைக்கு சென்றார். நேற்று இளையராஜா வேலைக்கு செல்லவில்லை என்றதும் அவரை பற்றி சக ஊழியர்கள் விசாரித்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை கம்பெனியில் உள்ள ஒரு அறையில் மூக்கு, வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இளையராஜா இறந்து கிடந்தார். இதை பார்த்ததும் இரவு பணியில் இருந்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல், எஸ்ஐ தாமோதரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அதற்குள் கம்பெனியின் நிர்வாகம் சார்பில், இளையராஜாவை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ‘’எதற்காக இங்கிருந்து உடலை எடுத்து சென்றீர்கள்’ என்று நிர்வாகத்திடம் போலீசார் கேட்டனர். அதற்கு நிர்வாகத்தினர், ‘வாய், மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. அவர் பிழைத்துக்கொள்வார் என்றுதான் சேர்த்தோம்’’ என்றனர். இதன்பிறகு போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.இதுபற்றி அறிந்ததும் இளையராஜாவின் மனைவி மற்றும் உறவினர்கள் மகேந்திரசிட்டிக்கு விரைந்தனர். இளையராஜா சாவு பற்றி விசாரித்ததுடன் நிர்வாகத்தினரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அங்கிருந்து மருத்துவமனைக்கு சென்று, கணவரின் உடலை பார்த்து மனைவி, உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசில் ரேவதி புகார் செய்தார். அதில், ‘’ கணவரின் சாவில் மர்மம் உள்ளது. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இளையராஜா அடித்து கொலை செய்யப்பட்டாரா, வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.