ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் : சரத் யாதவ் நம்பிக்கை
5/2/2025 5:13:54 PM
புதுடெல்லி: உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் அண்மையில் வெளியாகின. இவற்றில் 4 மாநிலங்களை பாஜ கைப்பற்றியுள்ளது. இந்த சூழலில் ஜூலையில் ஜனாதிபதி தேர்தல் வர உள்ளது. பாஜ வெற்றியின் மூலமாக ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆதரவு பாஜவுக்கு பெருகியுள்ளது. இதற்கிடையில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு ஒற்றுமையுடன் வாக்களித்தால் மட்டுமே பாஜ வேட்பாளரை தோற்கடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சோனியாவை சந்தித்து நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த சூழலில் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக ஜனதா தள தலைவர் சரத் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தலிலும், டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் மதசார்பற்ற வாக்குகள் பிரிந்ததால்தான் பாஜ வெற்றி பெற முடிந்தது. பாஜ பெற்ற ஓட்டுகளை விட சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் ஆகியவை மொத்தமாக வாங்கிய ஓட்டுகள் அதிகம். நாட்டை பாஜ ஆக்கிரமிப்பதை தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்தி ஒற்றுமையுடன் பாஜவுக்கு எதிராக வாக்களித்தால் அது ஒரு தொடக்கமாக அமையும். இதன் அடிப்படையில் பொது வேட்பாளரை எதிர்கட்சிகள் ஒன்றாக அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். யார் அந்த பொது வேட்பாளர் என்ற கேட்ட போது, முதலில் எதிர்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் பின்னர் தான் அதுகுறித்து முடிவு செய்ய இயலும் என்றார்.