செருப்பால் அடிக்க வேண்டும் என அரியானாவில் காங். தலைவர்களை அவமதித்து பேசிய பாஜ எம்பி
5/2/2025 5:11:09 PM
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் வளர்ச்சியை உருவாக்காத காங்கிரஸ் தலைவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என பாஜ எம்பியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள சின்கானா என்ற இடத்தில் நேற்று அம்பேத்கர் 126வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாஜ கட்சியின் குருஷேத்ரா தொகுதி எம்பி ராஜ்குமார் சைனி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், அரியானாவில் காங்கிரஸ் கட்சி பலமுறை ஆட்சி செய்துள்ளது.
ஆனால் மாநில மக்களுக்கு எந்த ஒரு முன்னேற்றத்தையும் காங்கிரஸ் கொண்டு வரவில்லை. அவர்களை பிச்சைக்காரர்களாக ஆக்கியதை தவிர வேறு எதையும் காங்கிரஸ் செய்யவில்லை. பாஜ ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் தவறான முடிவு எடுத்து விட்டதாக குற்றம் சாட்டி வருகிறது. அரியானாவில் வளர்ச்சியை உருவாக்க தவறிய காங்கிரஸ் தலைவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பேசினார்.
இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் பாஜ எம்பி பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மாநிலத்தில் மக்களிடையே நிலவிய சுமூகத் தன்மையை சீரழித்ததில் முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடாவுக்கு பெரும் பங்கு உண்டு. ஒவ்வொரு சாதியின் மக்கள் தொகைக்கு ஏற்றபடி இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று மேலும் சைனி குறிப்பிட்டார். தற்போது இந்த விவகாரம் அரியானா அரசியல் களத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.