மீஞ்சூர் பைபாஸ் சாலையில் ஆட்டோவை கடத்திய வாலிபர் கைது: போலீசாருக்கு பாராட்டு
4/28/2017 2:21:09 PM
ஆவடி: ஆவடி அருகே நள்ளிரவில் வியாபாரி வீட்டு முன் நிறுத்திய இருந்த சரக்கு ஆட்டோவை ஒரு வாலிபர் கடத்தினார். அவரை மீஞ்சூர் பைபாஸ் சாலையில் ரோந்து போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை, பாலவேடு கிராமத்தை சேர்ந்தவர் மாரிசாமி (40). மளிகை கடை வியாபாரி. இவருக்கு சொந்தமாக சரக்கு ஆட்டோ ஒன்று உள்ளது. கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிவர மாரிசாமி பயன்படுத்தி வந்தார்.இந்நிலையில், தனது ஆட்டோவை நேற்று முன்தினம் இரவு வீட்டு முன் மாரிசாமி நிறுத்தி வைத்திருந்தாராம். இந்த ஆட்டோவை நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை காவல்நிலையத்தில் மாரிசாமி புகார் அளித்தார்.
இந்நிலையில், வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட பைபாஸ் சாலையில் ரோந்து போலீசார் நிறுத்த சொல்லியும் நிற்காமல் சென்ற சரக்கு ஆட்டோவை பைக்கில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
இன்ஸ்பெக்டர் சார்லஸ், எஸ்ஐ நவரத்தினம் நடத்திய விசாரணையில், வியாபாரி மாரிசாமியின் ஆட்டோவை கடத்தி சென்றதும் கடத்தியவர் திருவள்ளூர் அருகே வெங்கல், அம்பிகை நகரை சேர்ந்த ரபீக் (30) என்பதும் தெரியவந்தது. மேலும், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 5க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை திருடியதாக ரபீக் கூறியுள்ளார்.
இதையடுத்து ரபீக்கை கைது செய்து, அவர் திருடிய 4 ஆட்டோக்களை பறிமுதல் செய்ய மதுரைக்கு போலீசார் விரைந்து உள்ளனர். ஆட்டோவை கடத்திய வாலிபரை விரட்டி பிடித்த 2 ரோந்து போலீசாருக்கும் உயர் அதிகாரிகள் பாராட்டி வெகுமதி அளித்தனர்.