செங்குன்றம் சார்பதிவாளர் ஆபீசில் புரோக்கர்கள் கடும் கெடுபிடி
4/19/2017 3:04:27 PM
புழல்- சென்னை செங்குன்றம், வள்ளலார் தெருவில் வாடகை கட்டிடத்தின் முதல் மாடியில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பத்திரப்பதிவு, வில்லங்கச் சான்று, பிறப்பு-இறப்பு சான்றிதழ், திருமணப் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்கள், அங்கு குடிநீர் மற்றும் கழிவறை வசதி இல்லாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களைவிட புரோக்கர்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றனர். இதனால் சான்றிதழ் பெற வரும் பொதுமக்களுக்கு யார் ஊழியர், யார் புரோக்கர் எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.
சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள், அங்குள்ள ஊழியர்கள் பல்வேறு காரணங்களை கூறி பல நாட்களுக்கு அலைக்கழித்து வருகின்றனர். அங்குள்ள ஊழியர்களும் தங்களது அடையாள அட்டைகளை அணிவதில்லை. இதுபோல் பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகத்திலும் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுகின்றன. புரோக்கர் தொல்லை அதிகரித்து உள்ளது என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.