மத்திய அரசிடம் நிதி பெற நான் வியாபாரி அல்ல: கிரண்பேடி
4/12/2025 5:08:05 PM
புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி வளர்ச்சிக்காக என்னுடன், முதல்வர், தலைமை செயலர் இணைந்து செயல்பட வேண்டும். இனி அரசு அறிக்கைக்காக காத்திருக்க மாட்டேன். கோப்புகளை நான் முடக்கவும் இல்லை. என்னிடம் கோப்புகள் தேங்கி கிடக்கவும் இல்லை. சில கோப்புகளில் அமைச்சரவையோடு மாற்று கருத்து இருந்தால் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். அதை தான் செய்கிறேன். அதனால் கோப்புகளை முடக்குவதாக புகார் கூறுவது சரியில்லை.
மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று தர கூறுகிறார்கள். நான் வியாபாரியும் இல்லை. பணம் மரத்தில் காய்ப்பதுமில்லை. முழுமையாக திட்டத்தை தயாரித்து அனுப்பினால் பணம் தருவார்கள். நிதி தொடர்பான கோப்புகள் முழுமையாக இல்லை. ஆய்வுக்கோ, மக்கள் குறை கேட்கவோ செல்லும்போது அதிகாரிகள் உடன் வருவதில்லை. இதற்கு காரணம் தலைமை செயலரின் உத்தரவுதான். நான் எப்போதும் மாநில வளர்ச்சியை அடிப்படையாக கொண்டே செயல்படுகிறேன்.
என்னுடைய பணியை யாராலும் நிறுத்த முடியாது. எனக்கான பணிக்காலம் இருக்கும் வரை பணியை மேற்கொள்வேன். அரசு எனக்கான ஒத்துழைப்பை அளிக்காவிட்டாலும் நேரடியாக களத்திற்கு செல்வேன். தினமும் 19 மணி நேரம் புதுச்சேரி மக்களுக்கான பணியை மேற்கொண்டு வருகின்றேன். ரூ.36 கோடி வைப்பு நிதியில் முறைகேடு நடந்திருப்பது கிரிமினல் குற்றம். புதுச்சேரியில் நிலவும் கலாச்சாரத்தை மாற்றியாக வேண்டும் என்றார்.