டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 30 நாளை தொட்டது : உடலில் கோரிக்கைகள் எழுதி ஆர்ப்பாட்டம்
4/12/2025 4:54:13 PM
புதுடெல்லி: புதுடெல்லியில் விவசாயிகள் போராட்டம் இன்று 30வது நாளாக நடக்கிறது. இதுவரை பல நூதன போராட்டங்கள் நடத்தி வந்தவர்கள் இன்று உடல் முழுவதும், ‘வங்கி கடனை ரத்து செய், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துக்கொடு மத்திய அரசே’என்ற வாசகத்தை எழுதி போராட்டம் நடத்தினர். இதில் ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கலந்துகொள்கிறார்கள். இதைத்தவிர மத்திய அமைச்சர்கள் சிலரும் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் நேற்று பா.ஜ மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் ஓரளவுக்கு உடன்பாடு எட்டிய நிலையில் இன்று மீண்டும் பொன் ராதாகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் எழுத்துப்பூர்வமாக எழுதி தருகிறார்கள். அதனை பெற்றுக்கொண்டு கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சந்தித்து மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்து விவசாயிகளின் கோரிக்கையை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்ய உள்ளார்.
விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு உள்பட 5 பேர் இன்று காலை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்தார்கள். இதுகுறித்து தம்பிதுரை கூறும்போது, தமிழக விவசாயிகளின் கோரிக்கை குறித்து பிரதமரிடம் ஒரு மனு கொடுத்தேன். மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர், விவசாயிகளின் வங்கி கடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, வறட்சி நிவாரணம் ஆகிய கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்குண்டான நடவடிக்கைகளை மிகவிரைவில் மேற்கொள்வதாக கடிதத்தின் மூலம் பதில் கொடுத்திருக்கிறார். அந்த கடிதத்தை விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும்போது அவரிகளிடம் காட்ட உள்ளேன்’ என்றார்.