முடிச்சூர் பகுதியில் சாலையில் கழிவுநீர் வெள்ளம் ; தூர்வாராத கால்வாயால் அவலம்
12/2/2025 3:14:33 PM
தாம்பரம், -முடிச்சூர் பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய் தூர்வாராத தால் சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. அத்துடன் மழைநீரும் கலந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.சென்னை தாம்பரம்-முடிச்சூர் சாலையில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் ஒவ்வொரு மழையின்போது இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதும், அதில் கழிவுநீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசுவதும் வழக்கம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்களும் பல்வேறு பொதுநலச் சங்கங்களும் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், இப்பகுதியில் நேற்று பெய்த மழையால் இந்த சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் வழக்கம் போல கழிவுநீர் கலந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களும் இருசக்கர வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவி வருகிறது என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, இதுகுறித்து தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இங்குள்ள மழைநீர் வடிகால்வாய்களை உடனடியாக தூர்வாரி, அவ்வழியாக மழைநீர் வெளியேற விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய்கள் பரவாமல் தடுக்க துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.