வசதி இருந்தும் மகிழ்ச்சி இல்லையே - கஸ்தூரிராஜா குமுறல்
12/2/2025 3:12:18 PM
அர்ஷா, தாரா நடிக்கும் படம் ‘பார்க்க தோணுதே’. ஜெய் செந்தில்குமார் இயக்குகிறார். இசை மணிஸ். வி.கே.மாதவன் தயாரிக்கிறார். இதன் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் கஸ்தூரிராஜா கூறியது:சிறிய படங்கள் ஓடினால்தான் சினிமா நன்றாக இருக்கும். எல்லோருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள்தான். என் மூத்த மகன் செல்வா என்னை ஏன் கதாநாயகன் ஆக்கவில்லை என்கிறான். என்னை ஏன் நடிக்க விட்டாய் என்கிறான் தனுஷ். தொடக்க காலத்தில் நான் விஜயகாந்த், சத்யராஜ் போன்றவர்களிடம் கதை கூறியிருக்கிறேன். ஆனால் நடிக்க மறுத்து விட்டார்கள். பாரதிராஜா ஒரு கதை சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள், புதுமுக இயக்குனர் நீ சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா என்று என்னிடம் ஒரு நடிகர் கூறினார். நான் புதுமுகம் என்பதால் யாரும் நம்பவில்லை. எல்லா அறிமுகங்களும் இப்படிப்பட்ட அவமானங்களும் வலிகளும் கடந்துதான் வந்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியும் கூட இப்படிப்பட்ட அவமானங்களை கடந்துதான் உயர்ந்திருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி இல்லாமல் படம் எடுக்க முடியாது. அவ்வளவு பிரச்னைகள் வரும். பார்க்க தோணுதே பட தலைப்பை பார்க்கும்போது எனது காதல் காலம் நினைவுக்கு வருகிறது. காதலிக்காதவன் கலைஞனே கிடையாது. மதுரையில் 1974ல் ஒரு நிறுவனத்தில 4 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தபோது இருந்த சுதந்திரமும் மகிழ்ச்சியும் நிம்மதியும் இப்போது இல்லை. அப்போது முதல்மகன் செல்வா பிறந்தது, தனுஷ் பிறந்தது எல்லாமே சுதந்திரமும் மகிழ்ச்சியும் தந்தவை. இப்போது தனுஷை எவனோ ஒருவன் என் மகன் என்கிறான். எனக்கு எவ்வளவு பிரச்னை பாருங்கள். இன்று வசதிகள் இருந்தும் சுதந்திரமும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை.