ஸ்மார்ட் போன் கொண்டு செல்வதை தடுக்க தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடும் சோதனை - போராட்டம் நடத்த தொழிலாளர்கள் முடிவு
12/2/2025 2:28:06 PM
தூத்துக்குடி, -தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குள் நேற்று முதல் ஸ்மார்ட் போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கடும் சோதனைக்கு பிறகே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த அக்.16ம் தேதி பாய்லர் வெடித்து சிதறியதில் மூன்று ஒப்பந்த தொழிலாளர்கள் பலியாகினர். இது நடந்த சில தினங்களில் மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டது. ‘‘வாட்ஸ் அப்’’ மூலம் வெளி உலகிற்கு இது வேகமாக பரவியது.
அனல்மின் நிலைய பணியாளர்கள், தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் மூலம்தான் இந்த தகவல் வெளியே பரவுவதாக அனல்மின் நிலைய நிர்வாகம் கருதியது. இதனைத்தொடர்ந்து நேற்று முதல் அனல்மின் நிலையத்திற்குள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தக் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.தமிழகத்தில் வேறு எந்த அனல்மின் நிலையங்களிலும் இதுபோன்ற கடுமையான உத்தரவுகள் இல்லாத நிலையில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவை திரும்பபெற வேண்டும் என்று அவர்கள் கூட்டாக ஒன்றிணைந்து மின்வாரியத்தலைவர், இயக்குநரிடம் ஏற்கனவே கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் மின் உற்பத்திக்கழக இயக்குநர் இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அனல்மின் நிலைய நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், இதை மீறி தெர்மல் அனல்மின் நிலைய நிர்வாகம் நேற்று முதல் இந்த உத்தரவை கட்டாயமாக செயல்படுத்தியது.காலையில் அனல் மின் நிலையத்துக்கு பணிக்கு வந்த அதிகாரிகள், தொழிலாளர்கள் அனைவரையும் பாதுகாவலர்கள் சோதனையிட்டு அவர்கள் வைத்திருந்த ஸ்மார்ட் போன்களை வாங்கி தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். பணி முடிந்து செல்லும் போது செல்போன்களை திரும்ப பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.