தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் பயங்கரம் - 2 மாணவர்களுக்கு சரமாரி கத்திக்குத்து: 4 பேர் கைது
12/2/2025 2:22:46 PM
தூத்துக்குடி, -தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் 2 மாணவர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.தூத்துக்குடி புறநகர் பகுதிகளான பழையகாயல், முள்ளக்காடு, கோவங்காடு உள்ளிட்ட ஊர்களிலிருந்து டவுன் பகுதிக்குள் உள்ள பள்ளிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கோவங்காடு பகுதியிலிருந்து தூத்துக்குடி நகரத்திற்கு 5ஏ டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் தூத்துக்குடி வடக்கு கடற்கரை ரோட்டில் உள்ள ஒரு பள்ளி மற்றும் லயன்ஸ் டவுனில் உள்ள ஒரு பள்ளியில் கோவங்காடு, முள்ளக்காடு மற்றும் ராஜீவ்நகர் பகுதி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த இரு பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகிறது.
இவர்கள் வரும் 5ஏ டவுன் பஸ்சின் உட்புறம் ஜியாமெட்ரி பாக்ஸ் காம்பசால் தாங்கள் சார்ந்த சமுதாயத்தின் பெயரை வீரம் என்ற அடைமொழியுடன் சேர்த்து எழுத வடக்கு பீச்ரோட்டில் உள்ள பள்ளியின் 9ம் வகுப்பு மாணவர்கள் சிலர் முயற்சித்துள்ளனர். இதற்கு லயன்ஸ் டவுன் பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் 3 நாட்களுக்கு முன்பே அந்த பஸ்சில் இரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் முத்தையாபுரம் பெட்ரோல் பல்க் சந்திப்பில் 5 ஏ பஸ் வந்தது. இதில் வந்த இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் 11ம் வகுப்பு மாணவர்கள் முள்ளக்காட்டைச் சேர்ந்த பொன்திவாகர் (15), அரவிந்தராஜ் (17) ஆகிய 2 பேருக்கும் சரமாரி கத்திக்குத்து விழுந்தது
.
மோதலை உணர்ந்த பஸ்சின் டிரைவர் உடனடியாக பஸ்சை முத்தையாபுரம் போலீஸ் நிலையத்திற்கு ஓட்டி வந்தார். படுகாயமடைந்த பொன் திவாகர், அரவிந்தராஜ் 2 பேரையும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்று சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரணை நடத்தி மற்றொரு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முத்துராஜ் (17), முனீஸ்வரன் (15), முத்துமாரி (16), திருப்பதி (16) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.மாணவர்கள் கத்திக்குத்து பட்ட சம்பவம் தூத்துக்குடி மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கோவங்காடு, முத்தையாபுரம் பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.