ரூபாய் நோட்டு விவகாரம் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 மாத சம்பளம் ரொக்கமாக தர கோரிக்கை
11/19/2016 12:33:06 PM
புதுக்கோட்டை, -மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்யவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வங்கிகளில் பணம் எடுப்பதற்கு கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு காத்திருக்க வேண்டிய சிரமமான சூழல் உள்ளது. பல ஏடிஎம் மையங்கள் இன்னும் சீராக இயங்கவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்குவதிலும், சம்பளத்தை எடுப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் சத்தியமூர்த்தி கூறியதாவது:
அலுவலக பணிக்கு செல்பவர்கள் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் பணியாற்றிவரும் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாதத்தின் முதல் வாரத்தில் வீட்டு வாடகை, மின் கட்டணம், தொலைபேசி, படிப்பு கட்டணம், மருத்துவ செலவுகள் போன்ற அத்தியாவசிய பொருளாதார தேவைகளை தங்கள் ஊதியத்திலிருந்தே அளிக்க வேண்டும். மாத ஊதியத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்து செலவு செய்வது என்பது தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் சிரமத்தை ஏற்படுத்தும்.
வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதாலும், ஏடிஎம் மைங்களில் பணம் பெறுவதற்கான தனி நபருக்கான அளவீடு ரூ.2,500 என்ற கட்டுப்பாடு உள்ள நிலையிலும், வேலை நாட்களில் வங்கிக்கு சென்று பணம் எடுப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன.
அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நவம்பர் முதல் பிப்ரவரி வரையுள்ள 4 மாத ஊதியத்தை கையில் ரொக்கமாக வழங்கவும், நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்கவும் உடனடியாக உத்தரவிட வேண்டும்.இவ்வாறு சத்தியமூர்த்தி கூறினார்.