Untitled Document
2011
21
Jun
ஆஸ்துமா அவஸ்தைக்கு ஹோமியோ தீர்வு!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சுவாசத்தின் மூலம் நமது ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு உடல் இயக்கம் எந்த தடையும் இன்றி நடந்து வருகிறது. சுவாச செயல்பாட்டில் பிரச்னை வருவதை ஆஸ்துமா என்கிறோம். சுவாசக் குழல் சுருங்குதல், நுரையீரல் வீங்குதல் போன்ற காரணங்களால் இது உண்டாகிறது. சாதாரண மூச்சு திணறல் தானே என்று கண்டுகொள்ளாமல் விட்டால், நுரையீரல் புற்று நோய்க்கு வழிவகுத்து விடும் என்கிறார் ஹோமியோ மருத்துவர் சசிக்குமார். அவர் கூறியதாவது: சுவாசப் பிரச்னைதான் ஆஸ்துமா. பெரும்பாலும் இதன் தொடக்கம் அலர்ஜிதான். நுரையீரல் நோய்களும் சுவாச தடையை உருவாக்குகின்றன.

தூசு, மண், விலங்குகளின் ரோமம் மற்றும் குளிர் காலநிலை ஆகியவற்றால் அலர்ஜி உண்டாகிறது. இதன் மூலம் நுரையீரலை சுற்றியுள்ள சவ்வு வீங்குகிறது. சுவாசக் குழல் இறுகி சுற்றளவு குறைந்து மூச்சு திணறலை ஏற்படுத்துகிறது. சிலந்தி வலையில் உள்ள டஸ்டிநைட்டி என்ற பாக்டீரியாவும், ரைனோ வைரசும் மூச்சு திணறலை ஏற்படுத்துகின்றன. நுரையீரல் அலர்ஜி மற்றும் தொற்றின் காரணமாகவும் ஆஸ்துமா ஏற்படுகிறது. பொதுவாக இந்த அலர்ஜி பிரச்னையால் அதிகாலை மற்றும் நடு இரவு நேரங்களில் மூச்சு திணறல் ஏற்படும். சிலருக்கு அதிகாலை நேரங்களில் தொடர் தும்மல் போன்ற தொல்லைகள் தாக்க வாய்ப்புள்ளது.

சுவாச பிரச்னையின் காரணமாக உடலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் மூளை அமைதியற்ற நிலையில் காணப்படும். தூக்கம் வராமல் தவிப்பது, நிம்மதியின்றி இருக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவை ஆஸ்துமாவின் அறிகுறிகளாகும். எந்த மருத்துவமும் செய்து கொள்ளாமல் இருத்தல் அல்லது பிரச்னை உண்டாகும்போது மருந்து கடையில் ஏதாவது ஒரு மருந்தை வாங்கி சுய மருத்துவம் செய்து கொள்ளுதல் போன்றவற்றால் ஆஸ்துமா குணமாகாது. மேலும் இது நுரையீரல் புற்றுநோய் வரை கொண்டுவிட வாய்ப்புள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆஸ்துமாவால் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குழந்தைகளுக்கு தொடக்கத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் முற்றிலும் குணமாக்க முடியும். வயதானவர்களையும் இது எளிதில் தாக்குகிறது. இவர்கள் அலர்ஜிக்கான காரணத்தை கண்டறிந்து தவிர்ப்பதுடன் உடனடியாக சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். புகை பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் பாதிப்பின் காரணமாக ஆஸ்துமா உண்டாக வாய்ப்புள்ளது. எனவே கண்டிப்பாக புகை பிடிப்பதை கைவிட வேண்டும்.

பெண்கள் அதிக நேரம் சமையல் அறையில் இருப்பது, தண்ணீரில் வேலை செய்வது போன்ற காரணத்தால் இந்நோய்க்கு அதிகளவில் ஆளாகிறார்கள். அதிகாலையில் எழுந்து சமைப்பது போன்ற அன்றாட நடைமுறைகளில் சில பாதுகாப்பு முறைகளை கையாள்வதன் மூலம் ஆஸ்துமா மற்றும் தும்மல் போன்ற பிரச்னைகளை தடுக்க முடியும்.  

பாதுகாப்பு முறை:

ஆஸ்துமா ஏன் ஏற்படுகிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்வதன் மூலம் அதனை கட்டுப்படுத்த முடியும். ஆரம்ப நிலையான அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை தவிர்ப்பது நல்லது. நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். எனவே உரிய காரணத்தை கண்டறிந்து தவிர்ப்பது அவசியம். அதே போல் விலங்குகளின் ரோமத்தை கொண்டு தயாரிக்கப்படும் உடை, விரிப்பான், கம்பளம் மற்றும் கலை பொருட்களை அலர்ஜி உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டாம்.

காற்றின் வழியாகப் பரவும் தூசு மற்றும் மகரந்தம் அலர்ஜியை உண்டாக்குகிறது என்றால் வீடு, பணியிடம் மற்றும் வாகனங்களில் தூசு சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம். மேலும் தூசி, புழுதி உள்ள இடங்களில் பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் முகமூடி அணிந்து கொள்ளலாம். ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகையான புகைகளில் இருந்தும் தள்ளியிருப்பது நல்லது. பூக்கள் விரிந்து மகரந்தம் காற்றில் கலக்கும் காலை, மாலை நேரங்களில் பூக்கள் இருக்கும் பகுதிக்கு செல்லாமல் இருப்பதும் நல்லது. பழைய உணவுகளை தவிர்த்து எப்போதும் சூடாக சாப்பிடலாம்.      

ரெசிபி

வாழைப்பூ பொடிமாஸ்: வாழைப்பூவை சுத்தம் செய்து, ஆவியில் வேக வைக்கவும். அதை மிக்சியில் அரைத்து சிறிதளவு புளி மற்றும் உப்பு சேர்த்து பிசறி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். இதில் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் முருங்கைக் கீரை கால் கப் சேர்த்து வேக விடவும். இத்துடன் வாழைப்பூ கலவை சேர்த்து பொடிமாசாக கிளறவும். உதிரியாக வந்த பின்னர் அதில் தேங்காய் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

ஸ்டப்டு கத்தரிக்காய்: பெரிய கத்தரிக்காய் அரை கிலோ எடுத்து கொள்ளவும். கத்தரிக்காயை நான்காக கீறி எண்ணெயில் பாதியாக வேக வைக்கவும். கொத்தமல்லித் தழை ஒரு கட்டு, இஞ்சி பேஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் காரத்துக்கு சேர்த்து மூன்றையும் நன்றாக அரைத்து உப்பு, மஞ்சள் சேர்த்து கத்தரிக்காயின் உட்பகுதியில் ஸ்டப் செய்யவும். வாணலியில் மீண்டும் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து கத்தரிக்காய் சேர்த்து வதக்கி இறக்கவும்.

கம்பு வடை: கம்பு ஒரு கப், புழுங்கல் அரிசி கால் கப் இரண்டையும் தனித்தனியாக ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு இரண்டும் அரை கப் தனியாக ஊற வைத்து கரகரப்பாக அரைத்து ஏற்கனவே அரைத்த மாவில் சேர்க்கவும். இஞ்சி, கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் அரை கப் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்த மாவில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு போட்டு வடை பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் கம்பு வடை ரெடி.

பாட்டி வைத்தியம்

வேப்பங்கொழுந்தை பறித்து துளசியுடன் சேர்த்து அரைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டால் அலர்ஜி குணமாகும்.
 
வெற்றிலை 10, மிளகு 10 கிராம், நொச்சி இலை 10, மிளகாய் செடி இலை 10 ஆகியவற்றை அரைத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வெயிலில் உலர்த்தவும். இதை காலை, மாலை சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்.

வெற்றிலைச்சாறுடன் இஞ்சி சாறு கலந்து குடித்தால் மார்புச் சளி, சுவாசக் கோளாறு குணமாகும்.
 
பூண்டு சாறு எடுத்து அதில் வெல்லம் கலந்து குடித்தால் சளி, இருமல் குணமாகும்.

வெந்தயக் கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் இருமல் சரியாகும்.

வெங்காயத் தாளை அரைத்து அதில் திப்பிலியை கலந்து காயவைத்துப் பொடியாக்கி அதை தேனில் குழைத்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும்.

வெங்காயத்தை சுட்டு சாப்பிட்டால் இருமல் மற்றும் கபக்கட்டு நீங்கும்.

மூன்று வில்வம் இலை, மூன்று மிளகு எடுத்து பொடியாக்கி காலை நேரத்தில் மட்டும் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

வன்னிக்காயை பொடி செய்து கொள்ளவும். அதில் குல்கந்தை கலந்து சாப்பிட்டால் மார்புச் சளி சரியாகும்.

வல்லாரைக் கீரை சாற்றில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி வைக்கவும். காலை, மாலை 2 வேளையும் ஒரு கிராம் அளவுக்கு தேனில் கலந்து சாப்பிட்டால் சளி குணமாகும்.

டயட்

மூச்சு திணறல், மூக்கடைப்பு, தொண்டை வலி உள்ளிட்ட பல தொந்தரவுகள் ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்படும். அலர்ஜி பிரச்னையால் சளித் தொல்லை உள்ளவர்கள் அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களை தவிர்ப்பது நல்லது. காற்று மாசுபடும் தொழிற்சாலைகளின் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் அதிகளவில் இந்நோய் உண்டாகிறது. பால் மற்றும் பால் பொருட்கள், இனிப்பு வகைகள், தயிர், மோர், பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கும் ஜூஸ் மற்றும் உணவு வகைகளை தவிர்க்கவும். கீரைகள் மற்றும் பழங்களை இரவு நேரங்களில் சாப்பிடக் கூடாது. நீர்க்காய்களும் வேண்டாம்.

இளநீர், நுங்கு போன்ற குளிர்ச்சி தரும் உணவு வகைகளையும் தவிர்ப்பது நல்லது. ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் எப்போதும் சூடாகவே சாப்பிட வேண்டும். அதிகளவு புரதம் மற்றும் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். பாதி வேக வைத்த காய்கறிகளில் செய்த சாலட் சேர்த்துக் கொள்ளலாம். ஊட்டச்சத்து பானங்கள் குடிக்கலாம். தேவையற்ற உணவுகளை தவிர்த்து போதுமான சத்துகள் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டால் ஆஸ்துமாவை சமாளிப்பது எளிது என்கிறார் உணவு
ஆலோசகர் சங்கீதா.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க
saminathan - colombo
8/25/2011 -- 14:5:36

மிகவும் பயனுள்ள தகவல்களை ஹெஅழ்த் நியூஸ் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,