வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே தென்னேரி கிராமத்தில், காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் வரதராஜ பெருமாள் கோயிலின் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து கடந்த செவ்வாய் இரவு வரதராஜபெருமாள் புறப்பட்டு, புதன்கிழமை காலை தென்னேரி கிராமத்துக்கு வந்தடைந்தார்.அவருக்கு அங்குள்ள மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து ஐமஞ்சேரி, திருவாங்கரணை, நாவிதன்குளம், குன்னவாக்கம், அகரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வந்த வரதராஜ பெருமாளுக்கு, அந்தந்த கிராமங்களில் திருமஞ்சன அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதன் பின்னர் மீண்டும் தென்னேரி கிராமத்துக்கு வந்தடைந்த வரதராஜ பெருமாள், அங்குள்ள ஏரியில் பூக்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இந்த தெப்ப உற்சவத்தின்போது, வரதராஜ பெருமாளுக்கு பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர தீபாராதனைகள் காட்டியும் தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதற்காக வாலாஜாபாத்தை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.இதைத் தொடர்ந்து நேற்றிரவு வரதராஜ பெருமாள் மீண்டும் காஞ்சிபுரம் கோயிலுக்கு வந்து சேர்ந்தார். தெப்ப உற்சவத்தை காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.