Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
23
Mar
பிளஸ் 2 வினாத்தாள் லீக் : தேர்வு பணியிலிருந்து ஓசூர் டிஇஓ விடுவிப்பு : தேர்வுகளை கண்காணிக்க பேராசிரியர் குழு அமைப்பு


கிருஷ்ணகிரி: வாட்ஸ் அப்பில் பிளஸ்-2 கேள்வித்தாள் அனுப்பிய விவகாரத்தால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் நடைபெறும்  தேர்வை கண்காணிக்க, அண்ணா பல்கலைகழக பேராசிரியர்களை கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. புகாரில் சிக்கியுள்ள ஓசூர் மாவட்ட  கல்வி அலுவலர் தேர்வு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்  அடுத்த தின்னூர் அருகில் பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், கடந்த 18ம் தேதி நடந்த கணித தேர்வின் போது, ஓசூர்  விஜய் வித்யாலயா பள்ளியின் ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் கண்காணிப்பாளர்களாக பணியாற்றினர். அவர்கள் கணித தேர்வு தாளை  செல்போன் மூலம் படம் பிடித்து, வாட்ஸ் அப்பில் தங்களுடன் பணியாற்றும் உதயகுமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி கொடுத்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விஜய் வித்யாலயா  பள்ளியை சேர்ந்த 4 ஆசிரியர்களையும் கைது செய்தனர்.

சம்பவம் நடந்த பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள விஜய் வித்யாலயா பள்ளிகளில்  தற்போது வகுப்பறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றி வந்த அனைத்து ஆசிரியர்களையும், கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த  பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு இரண்டு கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இதனிடையே தனியார் பள்ளி ஆசிரியர்களை,  வகுப்பறை கண்காணிப்பாளர்களாக எவ்வாறு நியமித்தனர் என்பது குறித்து ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகண் தன்ராஜூக்கு மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு அவர் அளித்த பதிலில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில்  இருந்து போன் வந்ததால் தான், அவர்களை நியமித்ததாக கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை, சட்ட விரோதமாக தேர்வறை கண்காணிப்பாளர்களாக நியமித்ததில், மாவட்ட கல்வி அலுவலகத்தில் பெரும்  அளவில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. எனவே மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் மீதும் நடவடிக்கை பாயுமென தெரிகிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வினை கண்காணிக்க, தற்போது நியமிக்கப்பட்டுள்ள பறக்கும்  படையினர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களை கொண்டு சிறப்பு பறக்கும் படை ஒன்றையும், பள்ளி கல்வித்துறை நியமித்துள்ளது.  இவர்கள் இன்று முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் தேர்வினை கண்காணிப்பார்கள்.

வாட்ஸ் அப் மூலம் கேள்வித்தாளை அனுப்பிய செல்போன்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், அவற்றை கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில்  இன்று ஒப்படைக்கவுள்ளனர். அதை ஆய்வு செய்து, இதுபோல் வேறு ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை  மேற்கொள்ளப்பட உள்ளது.இதனிடையே தேர்வு பணியில் அலட்சியம் காட்டியதாக, நாமக்கல் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில், பணியாற்றி  வந்த, முதன்மை கண்காணிப்பாளர்கள் வேறு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் தலைமை ஆசிரியர்கள் ஆவர்.
அதிகளவில் புகார்கள் கிளம்பியுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நடைபெறும் பிளஸ்-2 பொதுத்தேர்வினை  கண்காணிக்க, சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களை கொண்ட 5 குழுக்களை அமைத்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த  குழுவினர் குறித்து ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. இவர்கள் எந்நேரத்திலும் அதிரடியாக தேர்வு மையங்களில் சோதனை நடத்துவார்கள் என  தெரிகிறது.

மேலும் புகாரில் சிக்கியுள்ள ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகண் தன்ராஜ், தேர்வு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக, கல்வித்துறை  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே பள்ளிக்கல்வி தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன், இன்று கிருஷ்ணகிரிக்கு வருகை தர உள்ளார். அங்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், சம்பவம் நடந்த பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் இதர தேர்வு மையங்களிலும், அவர்  அதிரடி ஆய்வு நடத்த உள்ளார். இதனால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று   பிளஸ்-2 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட விஜய் வித்யாலயா பள்ளியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு  விநியோகம் செய்யப்பட்டது. ஆர்ப்பாட்ட அறிவிப்பால் இன்று காலை பள்ளி முன்பு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement