சென்னை: ஊட்டியை சேர்ந்தவர் ரம்யா (27). இவர் சென்னையில் தனியார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். கல்லூரி எதிரே உள்ள தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். இதற்கிடையில், இவருக்கும் கிருஷ்ணகிரியில் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வரும் குமார் (27) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. நண்பர் வீட்டு சுப நிகழ்ச்சியின்போது நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் காதலாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரியில் பெற்றோருக்கு தெரியாமல் மாலை மாற்றி திருமணம் செய்துள்ளனர். பின்னர், தனி வீடு எடுத்து கணவன் மனைவியாக தங்கி உள்ளனர்.
இந்த தகவலை அறிந்து ரம்யாவை சந்தித்த அவரது பெற்றோர், அவரை சமாதானம் செய்தனர். ' உனக்கு வேறு நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம்' என்று கூறி அவரை அழைத்து சென்றனர். இதனால், விரக்தி அடைந்த குமார் தன் மனைவியை அவரது பெற்றோர் கடத்தி சென்று விட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனர். மனைவியை மீட்டுத் தர கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குமார் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், ரம்யா எழும்பூர் காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார்.
அதில், ' குமார் தன்னை கடத்தி சென்று மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்தார். இதை குடித்த நான் சுய நினைவை இழந்தேன். அப்போது, அவர் எனக்கு தாலி கட்டி உறவு கொண்டு விட்டார். மயக்கம் தெளிந்தபோது நான் அதிர்ச்சி அடைந்தேன். தாலியை கழற்றி எரிந்து விட்டு சென்னைக்கு வந்து விட்டேன். தற்போது அவர் தன்னுடன் வர மறுத்தால் முகத்தில் ஆசிட் வீசி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். எனவே குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என்று கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.