காரைக்கால்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாகை, காரைக்கால் மீனவர்கள் 43 பேர் இன்று ஊர் திரும்பினர்.நாகை, காரைக்காலை சேர்ந்த 86 மீனவர்கள் கடந்த பிப்ரவரி 26ம் தேதி கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. அவர்களது 11 விசைப்படகுகளும் பறிக்கப்பட்டன. பிரதமர் மோடி இலங்கை பயணத்தையொட்டி 86 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் படகுகள் விடுவிக்கப்படவில்லை. இதையடுத்து யாழ்ப்பாணம் சிறையிலிருந்த 43 மீனவர்கள் படகுகளின்றி தமிழகத்துக்கு கடந்த 14ம் தேதி வந்து சேர்ந்தனர்.இந்நிலையில், திருகோணமலை சிறையில் உள்ள நாகை மீனவர்கள் 16 பேர், காரைக்கால் மீனவர்கள் 27பேர் உள்பட 43 மீனவர்கள் 16ம் தேதி தமிழகம் திரும்புவதாக இருந்தது.
ஆனால் அவர்கள் தங்கள் படகுகளையும் சேர்த்து விடுவித்தால் மட்டுமே ஊர் திரும்புவோம் என்று 43 மீனவர்களும் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் தங்கிவிட்டனர். மீனவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் சமாதானப்படுத்தி படகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததால் 43 மீனவர்களும் ஊர் திரும்ப சம்மதித்தனர்.இதையடுத்து இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படை அதிகாரிகளிடம் நேற்று மீனவர்களை ஒப்படைத்தனர். அவர்கள் இன்று காலை காரைக்கால் வந்தனர். கடற்படையினர் மீனவர்களை மீனவளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீனவர்களை அவர்களது குடும்பத்தினர், நாகை, காரைக்கால் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
33 படகுகள் விடுவிப்புஇதற்கிடையே இலங்கை சென்ற மீனவர் குழு திருகோணமலையிலிருந்த நாகை அக்கரைபேட்டை, கீச்சாங்குப்பத்தை சேர்ந்த 8 படகுகளையும், ராமநாதபுரத்தை சேர்ந்த 4 படகுகள், புதுக்கோட்டை கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 21 படகுகள் தாங்கள் சென்ற படகுகளில் கட்டி இழுத்து வந்தனர். நாகையை சேர்ந்த 8 படகுகள் இன்று காலை நாகை கடற்கரைக்கு வந்து சேர்ந்தது. படகுகளை மீனவளத்துறை அதிகாரிகள், கடலோர காவல்படை அதிகாரிகள், மீனவர்கள் குடும்பத்தினர் வரவேற்றனர்.
மேலும் ஒரு நாகை படகு பழுதால் கட்டி இழுத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த படகு நாளை நாகை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேபோல் புதுக்கோட்டை கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 21 படகுகள் அங்குள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தன. ராமேஸ்வரம் படகுகள் 4ம் அங்கு சென்றடைந்தது. படகுகளுக்கு பூஜை செய்து மீனவர்கள் வரவேற்றனர். படகுகளை மீட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மீதமுள்ள 47 விசைப்படகுகளையும் விரைவில் மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கூறினர்.