ராம்பூர்: உத்தரபிரதேசத்தில் அமைச்சருக்கு எதிராக பேஸ்புக்கில் கமெண்ட் போட்ட 11ம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.உத்தரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியின் முதல்வர் அகிலேஷ் ஆட்சியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருப்பவர் அசம் கான். மேலும் கட்சியிலும் செல்வாக்கு மிக்க தலைவராகவும் விளங்கி வருகிறார். இந்நிலையில் அவரது இணையதள செய்தி தொடர்பாளர் பஷகத் அலி போலீசிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் 11ம் வகுப்பு மாணவர் ஒருவர் அமைச்சர் அசம்கானுக்கு எதிராக அவதூறாகவும், கடுமையாகவும் கமெண்ட் போடப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் அகிலேஷ், சமாஜ்வாடி தலைவர் முலாயம் ஆகியோரை குறித்து ஆபாசமான படங்களும் வெளியிடப்பட்டிருந்தன.
மேலும் வகுப்புவாத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து கஞ்ச் கோட்டிவாலி தானா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மாணவரை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காவல் நிலைய தரப்பில் கூறுகையில், மாணவரின் உண்மையான வயது எதுவும் இன்னும் சரியாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
மாணவரின் தந்தை கூறுகையில், போலீசார் என்ன செய்கின்றனர் என்பதே மர்மமாக உள்ளது. ஒரு நாள் திடீரென வீட்டிற்கு வந்து ரெய்டு நடத்தினர். பின்னர் எனது மகனை பிடித்து சென்றனர். எனது மகனை மீட்க உதவ வேண்டும் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் அமைச்சருக்கு எதிராக கமெண்ட் போட்டதற்காக பள்ளி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.