தாராபுரம்: தாராபுரம் அருகே சூனியம் வைத்து 40 பேரை கொன்றதாக கூறி மந்திரவாதியை அடித்து உதைத்த மக்கள் அவரது வீட்டை சூறையாட முயன்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் அருகே உள்ள பொடாரம்பாளையத்தை சேர்ந்தவர் ஆரான் (60). கூலி வேலை செய்து வருகிறார். இவர் பில்லி சூனியம் வைத்து கிராம மக்கள் பலரை சாகடித்ததாக கூறி நேற்று முன்தினம் இரவு ஊர் மக்கள் இவரை சுடுகாட்டு அருகே மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். தடுத்த மனைவி மாராளையும்(55) தாக்கினர். குண்டடம் போலீசார் இருவரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆரானை கிராமத்திற்குள் மீண்டும் விடக் கூடாது என்று அப்பகுதி மக்கள் வீரமாத்தியம்மன் கோயிலில் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோயிலில் போராட்டம் நடத்திய மக்கள் ஆரானின் வீட்டை சூறையாட திரண்டு சென்றனர்.
இதனால் பரபரப்பு ஏற்படவே திருப்பூரில் இருந்து அதிவிரைவு படையினர் வரவழைக்கப்பட்டனர். டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் கிராமத்தில் குவிக்கப்பட்டனர். ஆரானின் வீட்டை சுற்றிலும் போலீசார் நிறுத்தப்பட்டனர். பதற்றம் நிலவியதால் வருவாய்த்துறை யினர் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.' கடந்த சில மாதங்களாகவே ஊரில் பலரும் திடீர் திடீரென இறந்தனர். ஆரான்தான் பில்லி சூனியம் வைப்பது தெரிய வந்தது. அவரை கண்காணித்து வந்தோம். நேற்று முன்தினம் இரவு ஆரான், மாராள் இருவரும் சேர்ந்து சுடுகாட்டில் மனித உருவில் மாவு பொம்மை செய்து பூஜை செய்து கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கட்டி வைத்து தாக்கினோம்.
கடந்த 6 மாதத்தில் மட்டும் 40 பேர் இவர்களால் இறந்துள்ளனர். எனவே, ஆரானை மீண்டும் ஊருக்குள் அனுமதிக்க கூடாது. வீட்டை காலி செய்யும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம்' என ஆவேசத்துடன் கூறினர். சிலர் வீட்டுக்குள் புகுந்து பொருட் களை எடுத்து வீசினர்.இதையடுத்து, போலீசாரே ஒரு லாரியை வரவழைத்து ஆரானின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் காலி செய்து ஏற்றினர். அந்த பொருட்கள் நஞ்சியம்பாளையத்தில் உள்ள ஆரானின் மகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் வீட்டுக்கு பூட்டு போடப்பட்டது.இதனிடையே ஊர் மக்கள் தாக்கியதில் காயம் அடைந்த ஆரானும், மனைவியும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிந்த பிறகு அவர்களும் அனுப்பி வைக்கப்படுவர் எனத் தெரிகிறது. பதற்றம் நிலவுவதால் கிராமத்தில் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.