பெரம்பூர்: வியாசர்பாடி எஸ்ஏ காலனியை சேர்ந்தவர் தினேஷ்(21), இளைஞர்படை காவலர். இவர் வியாசர்பாடி காவல் நிலையத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை சத்தியமூர்த்தி நகர் 59வது பிளாக் பகுதியில் கஞ்சா, மாவா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி தினேஷ், மற்றும் எஸ்ஐ அருள்தாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு கஞ்சா விற்ற வியாசர்பாடி ஜெ.ஜெநகர் 3வது பிளாக்கை சேர்ந்த கபாலி (35) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அப்போது அங்கிருந்த சில நபர்கள் கபாலிக்கு ஆதவராக பேசியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று மதியம் ஜனநாயக புரட்சி முன்னணி கட்சி தலைவர் ரவி என்பவர் 20 பேருடன் அத்துமீறி காவல் நிலையத்தில் நுழைந்து அங்கிருந்த இளைஞர் காவல் படை சேர்ந்த தினேஷை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக தினேஷ் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பெயரில் போலீசார் வழக்கு பதிந்து உதயசூரியன் நகரை சேர்ந்த ரமணன்(47), இவரது மகன் தமிழரசன்(23), பிரேம்குமார்(21), கபாலி ஆகிய 4 பேரை நேற்றிரவு கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ரவி உட்பட் 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.