பெல்கிரேடு: செர்பியாவில் ஒரு தாயின் தோளில் தூங்கி கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தையை 3 பேர் கொண்ட பிரெஞ்சு கும்பல் காரில் கடத்தியது. அவர்களை சினிமாவில் வருவது போல் காரிலும் ஹெலிகாப்டரிலும் போலீஸ் துரத்தி சென்று கைது செய்தது.பால்கன் தீபகற்ப பகுதியில் மத்திய தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் செர்பியாவும் ஒன்றாகும். செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் நேற்று மதியம் சாலையோரத்தில் ஒரு பெண் தனது 2 வயது பெண் குழந்தையை தோளில் சுமந்தபடி நின்று கொண்டிருந்தாள். அப்போது வேகமாக வந்த ஒரு கார் அவள் அருகே நின்றது. அதிலிருந்து 3 பேர், அந்த பெண்ணின் கையில் இருந்த குழந்தையை பிடுங்கி கொண்டு காரில் தப்பி ஓடினார்கள். அந்த பெண், என் குழந்தையை கடத்துகிறார்கள் என்று கதறினாள்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெல்கிரேடு நகர ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு அந்த பெண்ணிடம் விசாரித்துவிட்டு, குழந்தையை கடத்தி சென்ற காரை சினிமா பாணியில் காரிலும் ஹெலிகாப்டரிலும் துரத்தினார்கள்.சுமார் 3 மணி நேரம் கழித்து பெல்கிரேடு நகரிலிருந்து வடமேற்கே சுங்கச்சாவடி அருகே அந்த கார் தடுத்து நிறுத்தப்பட்டது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த காரின் ஆவணங்களை சுங்கச்சாவடி அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை துரத்தி சென்ற போலீசார், சோதனை சாவடி அருகே குழந்தையை கடத்திய ஒரு பெண் உட்பட 3 பிரெஞ்சு வாலிபர்களை கைது செய்தனர்.அவர்களிடம் பிரெஞ்சு பாஸ்போர்ட் இருந்ததால், அவர்களது தகவல் குறித்து பிரெஞ்சு தூதரகத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களால் கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.குழந்தையை கடத்தியவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று செர்பிய உள்துறை அமைச்சர் நிபோஜ்சா ஸடீபானோவிக் கூறினார்.