ஆக்லாந்து: இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் குரூப் பி பிரிவு லீக் போட்டி ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் நடந்தது. இந்த உலக கோப்பையில் 6வது வெற்றி, உலக கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக 10வது வெற்றி ஆகியவற்றை பெறும் நோக்கத்துடன் இந்தியா களமிறங்கியது. குரூப் பி பிரிவில் புள்ளிப்பட்டியலில் இந்திய முதலிடத்தில் உள்ளது. இந்தப்போட்டியில் வெற்றி பெற முடியாமல் போனாலும், இந்திய அணி காலிறுதியில் பங்களாதேஷையே எதிர் கொள்ளும் சாதகமான நிலையில் உள்ளது. ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் தற்காலிக கேப்டனான பிரெண்டன் டெய்லர், ஜிம்பாப்வே தேசிய அணிக்காக ஆடும் கடைசி போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் நியூசிலாந்து ஆடுகளங்களின் தன்மையை கருத்தில் கொண்டு, டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதல் பத்து ஓவர் ‘பவர் பிளே’வில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். முகமது ஷம்மி, உமேஷ் யாதவ், மொகித் சர்மா ஆகியோரின் பந்து வீச்சு துல்லியமாக அமைந்திருந்தது. துவக்க பேட்ஸ்மேன் மசகட்சா 2 ரன் மட்டுமே எடுத்த நிலையில் யாதவ் பந்தை தொட்டு, விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்தார். மறொரு துவக்க வீரர் சிபாபாவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 7 ரன் மட்டுமே எடுத்த சிபாபா முகமது ஷம்மி பந்தை அடிக்க முயன்று தவானிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து வந்த மிரே 9 ரன்களில் திருப்திப்பட்டு மொகித் சர்மா பந்தை அடிக்க முயன்று டோனியிடம் கேட்ச் கொடுத்தார்.
வரிசையாக விக்கெட்டுகள் சரிந்த நிலையில், தடுமாறிக் கொண்டிருந்த ஜிம்பாப்வே அணியை கேப்டன் பிரெண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ் ஜோடி தூக்கி நிறுத்தியது.இருவரும் சிறிதும் பதற்றமின்றி இந்திய பந்து வீச்சை எதிர் கொண்டு அடித்து ஆடினர். சீன் வில்லியம்ஸ் அதிரடியாக ஆடி 3 சிக்சர்கள் விளாசினார். அவர் 57 பந்துகளில் 50 ரன்கள் (3 சிக்சர், 3 பவுண்டரி) அடித்த நிலையில் அஸ்வின் வீசிய பந்தை அடிக்க முயன்று அவரிடமே கேட்ச் கொடுத்தார். பிரெண்டன் டெய்லருடன் அடுத்து ஜோடி சேர்ந்த எர்வின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் டெய்லர் அசத்தலாக பேட்டிங் செய்ய ஸ்கோர் எகிறத் தொடங்கியது.ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள், அஸ்வினின் சுழல்பந்தை குறி வைத்து சிக்சர்கள், பவுண்டரிகளாக விளாசித் தள்ளினர்.
முகமது ஷம்மி வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கி சதத்தை எட்டினார் பிரெண்டன் டெய்லர். 99 பந்துகளில் 100 ரன்களை அவர் கடந்தார். ஒரு நாள் போட்டிகளில் டெய்லர் அடித்த 8வது சதம் இது. ஜிம்பாப்வே அணிக்காக அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் டெய்லர் படைத்தார். தொடர்ந்து அவர் அதிரடியாக விளையாடி சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். 39 ஓவரில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்தது.