திருவள்ளூர்: பெரம்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பேட்மின்டன் விளையாட்டு வீரர் மீது ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், இன்ஜின் முன் அவரது உடல் சிக்கியது. சிக்கிய உடலை திருவள்ளூரில் ரயிலை நிறுத்தி போலீசார் மீட்டனர். இதனால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை பெரம்பூர் ஜவகர் நகரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் பவித்ரன்(21). பேட்மின்டன் விளையாட்டு வீரரான இவர், நேற்று இரவு பெரம்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு நோக்கி இரவு 10.30 மணிக்கு புறப்பட்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், பவித்ரன் மீது மோதியது.
இதில், பவித்ரன் உடல் இன்ஜின் முன்புறம் உள்ள கொக்கியில் சிக்கியது. அங்கிருந்து உடலை இழுத்துக்கொண்டு ரயில் வேகமாக சென்றது. இதை மற்ற புறநகர் ரயில் நிலையங்களில் பார்த்த பயணிகள், இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து திருவள்ளூர் ரயில் நிலையத்தில், ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி, இன்ஜினில் சிக்கிய உடலை மீட்குமாறு ரயில் இன்ஜின் டிரைவருக்கு உயரதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூரில் நள்ளிரவு 11.20 மணிக்கு நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து ரயில் இன்ஜின் முன்புறம் சிக்கிய விளையாட்டு வீரர் பவித்ரன் உடலை ரயில்வே போலீசார் அரை மணி நேரம் போராடி மீட்டனர். இதனால், ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணி நேரம் தாமதமாக திருவள்ளூரில் இருந்து புறப்பட்டது.பெரம்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய விளையாட்டு வீரர் உடலை, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மீட்ட சம்பவம் நள்ளிரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.