புதுடெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி விடுப்பில் சென்றுள்ளது தொடர்பாக மர்மம் நீடித்து வரும் வேளையில் நேற்று அவரது அலுவலகத்தில் டெல்லி போலீசார் வந்து விசாரணை நடத்தினர். ராகுலின் அங்க அடையாளங்களை பற்றி விசாரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராகுல் காந்தி பட்ஜெட் கூட்டத் தொடரில் விடுப்பு எடுத்துக் கொண்டு வெளிநாடு சென்றுள்ளார். இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள்ளும், வெளியிலும் சர்ச்சைகளை உருவாக்கின. வருகிற ஏப்ரலில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் ராகுல் தலைமை பொறுப்பு ஏற்க இருப்பதாகவும், இது தொடர்பாக ராகுலுக்கும் சோனியாவுக்கும் இடையே காணப்படும் கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் விடுப்பில் சென்றதாகவும் ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.
ஆனால் மற்றொரு தரப்பினர் லோக்சபா தேர்தலைத் தொடர்ந்து அடுத்தடுத்து மகாராஷ்டிரா, அரியானா, டெல்லி உள்ளிட்ட மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் பலத்த அடி வாங்கியது. குறிப்பாக டெல்லி தேர்தலில் 15 ஆண்டு கால ஆட்சியை நழுவ விட்டதுடன் வெறும் பூஜ்யம் மட்டுமே பெற்றது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே கட்சி தலைமையில் மாற்றம் வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வரும் வேளையில் இந்த தோல்விகள் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என்ற குரலுக்கு அழுத்தம் ஏற்படத் தொடங்கியது. எனவே தோல்விக்கான காரணத்தை குறித்து சுய பரிசோதனை செய்து கொள்வதற்காகவே ராகுல் விடுப்பில் சென்றதாகவும் மற்றொரு தரப்பு கூறுகிறது.
அதே வேளையில் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளதால் அது குறித்து திட்டமிடுவதற்காகவும், ஏப்ரலில் தலைமை பொறுப்பை ஏற்று கட்சியில் பல்வேறு மாற்றங்களை ராகுல் மேற்கொள்ள உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அவர் ஐரோப்பாவில் இருப்பதாகவும், மியான்மரில் இருப்பதாகவும் பல்வேறு செய்திகள் வெளிவந்தன. அவர் நிச்சயம் திரும்பி வருவார். கட்சியை தலைமை தாங்கி நடத்துவார் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் ராகுல் விடுப்பு குறித்து பாஜ உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன. மேலும் அவர் எங்கு சென்றுள்ளார் என்ற மர்மம் நீடித்து வருகிறது.
இந்த சூழலில் டெல்லியில் நேற்று ராகுல் அலுவலகத்தில் போலீசார் திடீரென வந்து விசாரணை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்திகளில், ராகுல் அலுவலகத்திற்கு நேற்று வந்த டெல்லி போலீசார் அங்கிருந்த மேலாளரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ராகுலின் அங்க அடையாளங்கள் குறித்து விசாரித்தனர். அவரது கண்களின் நிறம் என்ன? அவரது தலைமுடியின் கலர் என்ன? என்று பல்வேறு கேள்விகளையும் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை கேட்டு ராகுல் அலுவலக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் ராகுலின் புகைப்படத்தையும் எடுத்துச் சென்றதாக ராகுல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து டெல்லி காவல்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது பதில் அளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இது வழக்கமான சோதனைதான் என பாஜ தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.ராகுல் அலுவலகத்தில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்திய விவகாரம் காங்கிரஸ் மேலிடத்தில் கோபத்தை எழுப்பியுள்ளது.இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ராகுல் தற்போது எம்பியாக உள்ளார். அவரது புகைப்படம் வேண்டும் என்றால், இன்டர்நெட்டில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். வேறு தகவல் எதுவும் வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் அவரை குறித்த ஆவணங்கள் உள்ளன. அங்கு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.ராகுல் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதை கண்டித்து போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.