புதுடெல்லி: தூய்மை இந்தியா திட்டம், மேக் இன் இந்தியா திட்டம் ஆகியவை காந்தியின் கனவை நனவாக்கும் திட்டங்களாக உள்ளன என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், ‘சுத்தம் மற்றும் திறமைவாய்ந்த இந்தியா-காந்தியின் கனவு’ என்ற தலைப்பில், சர்வதேச கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:காந்தியின் கனவான தூய்மை, பசுமை, சுயமுன்னேற்றம் ஆகியவற்றை நாம் செயல்படுத்த வேண்டும். காந்தியின் கனவை நம்முடைய கனவாக நினைக்க வேண்டும். தூய்மை இந்தியா திட்டம், மேக் இன் இந்தியா திட்டம் ஆகியவை காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் உள்ளன.
2019ம் ஆண்டு அக்டோபர் 2ல் காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. எனவே, தூய்மை இந்தியா திட்டத்தை நாம் நிறைவேற்ற வேண்டும். நமது நாட்டிலேயே பொருட்களை தயாரிக்க வேண்டும் என்பது காந்தியின் கனவு. அந்தவகையில், உள்நாட்டிலேயே பொருட்களை தயாரிக்கும் திட்டமான, மேக் இன் இந்தியாவை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். இது நாடு வளர்ச்சி பாதையில் செல்ல உதவும். தூய்மையான மனம், உடலை சுத்தமாக பேணுவது, சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பது என சுகாதாரத்தை 3 கோணங்களில் காந்தி விவரித்துள்ளார்.
எனவே, சுத்தமாக வைத்திருப்பது என்பதை ஒவ்வொரு குடிமகனும் குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் பேசினார்.கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய நகர்ப்புற மேம்பாட்டுதுறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், ‘‘இந்த அரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம், முன்னேற்றத்தை அளிக்கும் அரசாக விளங்கி வருகிறது. காந்தியின் கனவை நனவாக்கும் வகையில், அடுத்த 5 ஆண்டுக்குள் சுத்தமான இந்தியாவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.