ரோட்டோரத்தில் கிடந்த துப்பாக்கி தோட்டாக்கள் : நாகர்கோவிலில் பரபரப்பு
நாகர்கோவில்: ரோட்டோரத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்ததால் நாகர்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்ம் அருகே ஒரு பவுச் கிடப்பதாகவும், அதில் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதாகவும் நேசமணிநகர்காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் வந்து அதை சோதனை செய்தனர். அதில் 6 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. உடனடியாக அதை காவல் நிலையம் கொண்டு சென்று ஆய்வு செய்தனர். அதில் இந்த தோட்டாக்கள் அனைத்தும் டபுள் பேரல் துப்பாக்கியில் (இரட்டை குழல் வகை) பயன்படுத்தக்கூடியது என்பது தெரியவந்தது. பெரும்பாலும் தனியார் நகை கடைகள், ஏ.டி.எம் சென்டர்கள், வங்கிகளில் பாதுகாப்பு பணியில் உள்ள தனியார் செக்யூரிட்டிகள் தான் இந்த வகை துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பயன்படுத்துவார்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து இந்த 6 தோட்டாக்களையும் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் ஒப்படைத்தனர். இது பற்றி போலீசார் கூறுகையில், ' கைப்பற்றப்பட்டு உள்ள தோட்டாக்கள், சாதாரண துப்பாக்கியில் பயன்படுத்தும் வகையை சேர்ந்தது. கடிகாரம், டி.வி. ரிமோட் போன்றவற்றில் பயன்படுத்தும் பேட்டரி அளவில் இந்த தோட்டாக்கள் உள்ளன. தனியார் செக்யூரிட்டிகள் யாராவது தவற விட்டு சென்று இருக்கலாம். உரிய புகார் வந்தால் விசாரணைக்கு பின், உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்' என்றனர்.