தேர்வு இல்லாமல் தேர்ச்சி இல்லை. திறமை, தகுதி இருந்தாலும், தேர்வே இல்லாத வெற்றியில் சுவாரசியம் இருப்பதில்லை. ‘பாஸா... பெயிலா’ என்று கேட்ட காலம் மலையேறிவிட்டது. ‘எத்தனை மார்க்?’ என்ற ரகசியத்தைத் தெரிந்துகொள்வதில்தான் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கிரிக்கெட்டில் தினம் ஒரு சாதனை நிகழ்வதைப் போல், மதிப்பெண்களை அள்ளிக் குவிப்பதில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் சாதனை மேல் சாதனை நிகழ்த்துகின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கியிருக்கிறது.
வழக்கம்போல், மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள்தான் முடிவுகளில் ஜொலிப்பார்கள் என்று கணிக்கத் தேவையில்லை. தேர்வு எழுதுவோரிலும், மாணவர்களை விட, மாணவிகள்தான் அதிகம். தேர்வு மையங்களில் சிறப்பான ஏற்பாடுகள் இருந்தால்தான், தேர்வு எழுதுவது எளிதாக இருக்கும். இதற்குரிய அக்கறையை, பள்ளிக் கல்வித்துறை காட்டியிருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் தேர்வு ஏற்பாடுகளில் அலட்சியம் காட்டியதற்காக, 2 அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில், மின் தடையைச் சமாளிக்க ஜெனரேட்டர் வசதி செய்வதைக் காட்டிலும், மின் தடையே இல்லாமல் செய்வதுதான் சிறந்ததாக இருக்கும்.
தேர்ச்சி சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்தாலும், அதைக் கல்வித்திறன் உயர்வாகக் கருத முடியவில்லை. மதிப்பெண்கள் அதிகரிப்பு - மனனக் கல்வியின் சாதனை. தேர்வு முறையில் காலத்திற்கேற்ற மாற்றம் கட்டாயத்தேவை. ‘நேருவின் மகள் யார்?’ என்ற கேள்விக்கு ‘இந்திரா காந்தி’ என்ற பதிலைத் தெரிந்து வைத்திருக்கும் மாணவர், ‘இந்திரா காந்தியின் தந்தை யார்?’ என்ற கேள்விக்கு ‘நேரு’ என்று பதிலளிக்கத் திணறுவதுதான் மனக்கல்வியில் உள்ள குளறுபடி. சிந்தித்தும், புரிந்தும் படிக்காதது தவறு என்று கூறுவதை விட, இதற்கான வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. பள்ளிகளும், ஆசிரியர்களும், மாணவனை நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவதற்கான கருவியாக மட்டுமே கருதுவதும், இதற்குப் பெற்றோர் உறுதுணையாக இருப்பதும்தான் காரணம். போட்டித்தேர்வுகளில் மாணவர்கள் சாதிக்க முடியாதது ஏன் என்று விளக்கத் தேவையில்லை.
ஆராய்ச்சிப்படிப்புகளில் மாணவர்களின் ஆர்வம், கடந்த காலங்களை விடக் குறைந்திருக்கிறது அல்லது அதன் தரம் சரிந்திருக்கிறது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். புத்திக்கூர்மை இருந்தாலும், சிந்தனை சார்ந்த கல்வி இல்லாததே, ஆராய்ச்சிப்படிப்புகளை மாணவர்கள் நாடாததற்கு பிரதானக் காரணம். மதிப்பெண் மீதான மோகம் குறைந்தால்தான், இந்த நிலைமையை மாற்ற முடியும். என்னதான் படித்தாலும், ஒழுக்கம் கற்றுத்தராத கல்வி பயன்தராது. இளையதலைமுறையினரிடம் ஒழுக்கம் மேம்பட்டால் அதுவே இனிய உலகம்.