பெய்ரூட்: சிரியாவில் சிறைபிடிக்கப்பட்ட 2 ஜப்பானிய பணயக் கைதிகளை விடுவிக்க, ரூ.12 ஆயிரம் கோடி ஜப்பான் அரசு வழங்க வேண்டும். இல்லையென்றால் அவர்களை கொன்றுவிடுவோம் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நேற்று வீடியோ மூலம் ஜப்பான் பிரதமருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதற்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.சிரியா மற்றும் ஈராக்கில் செய்தி சேகரிக்க செல்லும் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளின் பத்திரிகையாளர்களையும் மருத்துவ ஊழியர்களையும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு அந்தந்த நாடுகளிடம் பெருமளவு பணயத் தொகையை கேட்டு அச்சுறுத்தி வருகின்றனர்.கடந்த ஆகஸ்ட் மாதம் பணயத் தொகை தராததால், அமெரிக்காவை சேர்ந்த 3 பேரையும், இங்கிலாந்தை சேர்ந்த 2 பேரையும் கழுத்தை அறுத்து கொன்ற வீடியோ காட்சிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டு உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தார்கள்.
இந்நிலையில், சிரியாவில் செய்தி சேகரிக்க சென்ற ஜப்பானை சேர்ந்த கோட்டோ (48) மற்றும் யுகோவா (42) ஆகிய இருவரையும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த நவம்பர் மாதம் பணயக் கைதிகளாக சிறைபிடித்தனர். தற்போது அவர்களை விடுவிக்க இன்னும் 3 நாட்களுக்குள் ரூ.12 ஆயிரம் கோடி பணயத் தொகையாக வழங்க வேண்டும். இல்லையென்றால், அவர்களை கழுத்தை அறுத்து கொன்றுவிடுவோம் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். அவர்கள் கேட்கும் பணயத் தொகையை அளித்து, அவர்களின் தீவிரவாத போக்கை ஆதரிக்கவும் மாட்டோம். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து, அவர்களது தீவிரவாத செயல்பாடுகளை எதிர்கொள்வோம்.ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து 2 பணயக் கைதிகளையும் எவ்விதம் மீட்பது குறித்து ஜப்பான் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறினார்.