கிவி: உக்ரைனில் அந்நாட்டு ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 14 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.உக்ரைன் நாட்டில் அரசை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கிளர்ச்சியாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை பிடிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், டொனெட்ஸ்க் விமான நிலையத்தை கைப்பற்றும் முயற்சியில் கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இத்திட்டத்தை முறியடிக்கும் வகையில், உக்ரைன் நாட்டு ராணுவம் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக இருதரப்பினர் இடையே சண்டை தீவிரமடைந்து வருகிறது. நேற்று நடந்த சண்டையில் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் 8 பேரும், ராணுவ வீரர்கள் 3 பேரும் உயிரிழந்தனர். டெபல்ட்செவோ நகரில் நடைபெற்ற சண்டையின்போது, 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இரண்டு நாட்களில் மட்டும் 14 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 9 மாதங்களாக நடைபெற்ற சண்டையில் பொதுமக்கள் உட்பட 4800க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இருதரப்பினர் இடையே கடந்த செப்டம்பர் மாதம் சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் தற்போது மீறப்பட்டுள்ளது. சண்டை வலுத்து வரும் நிலையில், கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் பீட்டர் பொரோஷென்கோ தெரிவித்துள்ளார். உக்ரைனில் நடைபெற்று வரும் மோதல் குறித்து ஐநா பொது செயலாளர் பான்கி மூன் கவலை தெரிவித்துள்ளார். சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறக்கூடாது எனவும், சுமூக பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் எனவும் பான்கி மூன் வலியுறுத்தி உள்ளார்.