மைத்ரிபால சிறிசேனாவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து
புதுடெல்லி: இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேனாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இலங்கையில் அதிபர் ராஜபக்சே ஆட்சியின் போது இந்தியாவுடன் நெருக்கமான உறவு காணப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கைக்கு ஏராளமான ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை செய்தது. இதற்கு இலங்கை மற்றும் இந்திய தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு காணப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வீழ்த்தி மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ ஆட்சிக்கு வந்தது. தனது பதவியேற்பு விழாவின் போது இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரும் வந்து கலந்து கொண்டார். பின்னர் இந்தியாவின் புதிய பாஜ அரசும் ராஜபக்சேவுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்தது. அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது ராஜபக்சே வெற்றி பெற வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் எதிர்பார்ப்புக்கும் மாறாக அமைந்தது. எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்றுள்ளார். இன்று மாலை அவர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து புதிதாக அதிபராக வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேனாவுக்கு சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மைத்ரிபால சிறிசேனாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மைத்ரிபாலாவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.நரேந்தர மோடி தனது வாழ்த்து செய்தியில் இலங்கை இந்தியாவின் மிகவும் நெருங்கிய நட்பு நாடு. இலங்கையில் சமாதானம், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். மேலும் இலங்கையின் ஜனநாயக வழிமுறையில் நம்பிக்கை வைத்து பங்கு பெற்ற இலங்கை மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.