சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் இந்த ஆண்டாவது கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த உழவர்கள் மனதில் அரசின் கொள்முதல் விலை அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கதாகும். கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்த டன்னுக்கு ரூ.2650 என்ற விலையை தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க மறுத்து வருவதால் உழவர்களுக்கு இன்னும் ரூ.362 கோடி நிலுவைத் தொகை வர வேண்டியிருக்கிறது.இந்த தொகையை தமிழக அரசு வசூலித்து தருவதுடன், ஒரு டன் கரும்புக்கு ரூ.4,000 கொள்முதல் விலை அறிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி இருந்தேன். கடந்த 2013-14ம் ஆண்டில் மாநில அரசின் பரிந்துரை விலையை ரூ.550 ஆக குறைத்து, மத்திய அரசு விலையான ரூ.2,100 ரூபாயுடன் சேர்த்து ரூ.2650 வழங்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆனால், அதை எந்த தனியார் ஆலையும் ஏற்கவில்லை. மாறாக, உழவர்களுக்கு டன்னுக்கு ரூ.2250 மட்டுமே தனியார் ஆலைகள் வழங்கின.
ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து வந்த பரிந்துரை விலையான ரூ.550ல் ரூ.100ஐ குறைத்து, கரும்பு டன்னுக்கு ரூ.2650 என்ற விலையிலேயே தொடர்ந்து கொள்முதல் செய்யப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். இது கட்டுபடியாகாத விலையாகும். ஹரியானா மாநிலத்தில் ஒரு டன் கரும்புக்கு ரூ.3100, பஞ்சாபில் ரூ.2,950, உத்தரபிரதேசத்தில் ரூ.2900 என கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில அரசின் பரிந்துரை விலை குறைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய துரோகம் ஆகும்.கரும்புக்கு கட்டுபடியாகும் விலை வழங்கப்பட்டால் தான் விவசாயிகள் தொடர்ந்து கரும்பு சாகுபடியில் ஈடுபடுவார்கள். இல்லாவிட்டால் தமிழகத்தில் கரும்பு உற்பத்தியும், வேளாண் வளர்ச்சியும் குறைந்து விடும். இதை உணர்ந்து கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.