ராமேஸ்வரம்; புயலால் அழிந்த தனுஷ்கோடி நகருக்கு ரூ.25 கோடி மதிப்பில் இருவழிச் சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குறுகிய நேர கடல்வழிப் போக்குவரத்து துவக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 1914ல் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து துவங்கியது. அப்போது தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து மட்டுமே இருந்தது. சுற்றுலாப் பயணிகள் ரயிலில் தனுஷ்கோடி வரை சென்று, அங்கிருந்து கப்பலில் இலங்கை சென்று வந்தனர். கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டதால் தனுஷ்கோடி நகரம் வணிக ரீதியில் முக்கியத்துவம் பெற்றது.
கப்பல் போக்குவரத்து துவங்கி சரியாக 50 ஆண்டுகள் கழிந்த நிலையில், 1964 டிசம்பர் 23ம் தேதி நள்ளிரவில் வீசிய கோர புயலில் தனுஷ்கோடி நகரமே அழிந்தது. மக்கள் வசிக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1970ல் தனுஷ்கோடியில் இருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்து துவக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதனால் தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்தையும் துவக்க முடிவு செய்து, புயலில் சேதமடைந்த ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணியை துவங்கியது. ஆனால் திடீரென இத்திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து தனுஷ்கோடி துறைமுகம் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறையால் சாலை போடப்பட்டு போக்குவரத்து துவங்கியது.இச்சாலையில் குதிரை வண்டிகளிலும், வேன்களிலும் யாத்ரீகர்கள் தனுஷ்கோடி சென்று வந்தனர். பின்னாளில் ஏற்பட்ட கடல் அரிப்பால் இந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்தது.
இதனால் முகுந்தராயர் சத்திரம் வரை மட்டும் தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கப்பட்டது. தற்போது ராமேஸ்வரத்திலிருந்து முகுந்தராயர் சத்திரம் செக்போஸ்ட் வரை பஸ், கார்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்து சரக்கு வாகனங்கள் மற்றும் ஜீப்களில் தனுஷ்கோடிக்கு சென்று திரும்புகின்றனர்.தனுஷ்கோடியில் 800க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் குடிசைகளில் தங்கியிருந்து, மீன்பிடித் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் தனுஷ்கோடி சென்று வருகின்றனர். ஆனால் இதுவரை எவ்வித அடிப்படை வசதியும் தனுஷ்கோடியில் ஏற்படுத்தப்படவில்லை.
புயலால் பொலிவிழந்த தனுஷ்கோடியில் சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும், மீனவர்களும் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் மத்திய அரசு முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு 5 கிமீ தூரத்திற்கு புதிய சாலை அமைக்க முடிவு செய்தது. இதற்கான ஆய்வுப்பணிகள் முடிக்கப்பட்டு, சாலை பணிக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தனுஷ்கோடியில் புயலடித்து கடந்த 23ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. நேற்று காலை தனுஷ்கோடிக்கு புதிய சாலை பணிக்கான பூமி பூஜை நடந்தது.
முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில், சாலைப்பணி துவங்கும் இடத்தில் இப்பூஜை நடந்தது. முதல் கட்டமாக முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை 5 கிமீ தூரத்திற்கு இருவழிச் சாலை (22 அடி அகலம்) பணி நடைபெறும்.இதுதவிர தனுஷ்கோடி - அரிச்சல்முனை இடையே 4.5 கிமீ தூரத்திற்கு இரண்டாம் கட்ட சாலைப் பணிகளும் விரைவில் துவங்க உள்ளது. இதற்காக ரூ.25 கோடி நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் இருந்து கப்பல் போக்குவரத்து துவங்கி 100 ஆண்டுகள் கடந்த நிலையில், அழிந்த நகரை புதுப்பிக்கும் பணிக்கு ஆயத்தமாக சாலை பணி தற்போது துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.