புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.100 கோடியே 1 லட்சம் அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.இந்த தண்டனையை எதிர்த்தும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா மனுவைத் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச், 4 பேருக்கும் டிசம்பர் 18ம் தேதி வரை ஜாமீன் வழங்கி கடந்த அக்டோபர் 17ம் தேதி உத்தரவிட்டது. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 18ம் தேதிக்குள் அப்பீல் வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி தாக்கல் செய்யவில்லை என்றால் ஜாமீனை ரத்து செய்ய இந்த நீதிமன்றம் உத்தரவிடும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள சொத்து குவிப்பு வழக்கு ஆவணங்களை ஜெயலலிதாவின் வக்கீல்கள் ஜெராக்ஸ் எடுக்கும் பணியைத் தொடங்கினர். சுமார் 40 நாட்கள் இந்த பணி நடந்தது.
ஜெயலலிதா சார்பில் 173 புத்தகங்கள் கொண்ட ஆவணங்கள், சசிகலா, சுதாகரன் சார்பில் தலா 171 புத்தகங்கள் கொண்ட ஆவணங்கள், இளவரசி சார்பில் 170 புத்தகங்கள் கொண்ட ஆவணங்கள் என்று மொத்தமாக 685 புத்தகங்கள் கொண்ட சுமார் 2 லட்சத்து 15 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தயார் செய்தனர். அந்த ஆவணங்களை கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் கடந்த 8ம் தேதி தாக்கல் செய்தனர்.இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அப்பீல் தொடர்பான ஆவணங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டோம். எனவே, நிலுவையில் உள்ள ஜாமீன் மனு மீதான விசாரணையை முன்னதாக நடத்த வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் பாலி நாரிமன் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் 58வது வழக்காக விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் கே.டி.எஸ்.துள்சி ஆஜரானார்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த அப்பீல் வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் அதற்காக தனி டிவிஷன் பெஞ்ச்சை(நீதிமன்றம்) அமைக்குமாறும் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.