கும்பகோணம்: நாளை அரசு பஸ் ஸ்டிரைக் நடைபெறாது. ஸ்டிரைக் தேதி குறித்து முடிவு செய்ய 22ம் தேதி தொழிற்சங்க தலைவர்கள் கூட்டம் சென்னையில் நடக்கிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1 லட்சத்து 42 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனார். இவர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த 2013 ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. தொடர்ந்து அக்டோபர் 1 முதல் 12வது ஊதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அதற்கான பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் திருச்சியில் கடந்த 2ம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் மாநில மாநாடு நடந்தது. இதில் திமுகவின் தொமுச, சிஐடியூ, ஏஐடியுசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில், வரும் 19ம் தேதி மாநிலம் தழுவிய ஸ்டிரைக் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.இதுதொடர்பாக தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்தனர்.
இதற்கிடையில் கடந்த 8ம் தேதி சட்டசபையில் பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், 'ஊதிய உயர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. வழக்கு முடியும் வரை போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாராணமாக மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும்' என்று அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசின் தன்னிச்சையான இந்த முடிவை கண்டித்தும், ஏற்கனவே அறிவித்தபடியும் கடந்த 9ம் தேதி 11 தொழிற்சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சென்னை பல்லவன் சாலையில் மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக தயாரித்து அதை நிர்வாக இயக்குனருக்கு கொடுக்க முயன்றனர்.அப்போது போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் நாளை நடைபெறுவதாக இருந்த ஸ்டிரைக் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஸ்டிரைக் எப்போது நடைபெறும் என்பதை முடிவு செய்ய சென்னையில் வரும் 22ம் தேதி அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் ஸ்டிரைக் தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது.கும்பகோணம் மண்டல போக்குவரத்துகழக தொமுச பொதுச்செயலாளர் பாண்டியன், திருச்சி தொமுச செயலாளர் பாரதிதாசன் ஆகியோர் கூறியதாவது:நாங்கள் கொடுத்த வேலை நிறுத்த நோட்டீசில் 19ம் தேதியில் இருந்து 6 வார காலத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம் என்று தான் கூறி உள்ளோம். இந்த கால அவகாசம் ஜனவரி 30ம் தேதி வரை உள்ளது. இதற்கிடை«யில் டெல்லி பாராளுமன்றத்தில் இன்று வாகன சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
இதில் போக்குவரத்து கழகங்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படும் அம்சங்கள் இடம் பெறலாம் என்றும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் பெரும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது.இந்த மசோதா தாக்கல் ஆவதையொட்டி போக்குவரத்து கழக தொழிற்சங்க முக்கிய தலைவர்கள் இன்று டெல்லி சென்று உள்ளனர். எனவே நாளை ஸ்டிரைக் நடைபெறாது. ஸ்டிரைக் தேதியை முடிவு செய்ய வரும் 22ம் தேதி மாலை சென்னை தி.நகர், உஸ்மான் ரோட்டில் உள்ள தொமுச அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் ஸ்டிரைக் தேதி முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.