கர்நாடகா அணை கட்டுவதை தடுக்க தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம்: வைகோ வலியுறுத்தல்
ஆலங்குடி: காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1600 கி.மீ தூர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த புளிச்சங்காடு கைகாட்டியில் நேற்று பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: தமிழகத்தை வளப்படுத்திக் கொண்டிருக்கும் காவிரியில் மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணைகளை கட்ட முயற்சிப்பது சட்ட விரோதமானது. இதைத் தடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். அவ்வாறு முன்வருவதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்ல வேண்டும். தமிழகத்தில் அனைத்து கட்சிகளையும் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே மீண்டும் தேர்தலில் வெற்றி பெற திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த போது அவருக்கு மத்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. இதைக் கண்டித்து போராடினோம். பிரதமர் நரேந்திரமோடி, ராஜபக்சேவுக்கு நண்பர் என்பதால் நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது. காவிரியில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை மத்திய அரசு தடுக்கவில்லை என்றால் தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.