மன்னார்குடி: கர்நாடகா கட்ட உள்ள புதிய அணைகளை தடுக்கவேண்டும் என டெல்லியில் டெல்டா விவசாயிகள் 3 நாள் உண்ணாவிரதம் இருந்தனர். தமிழக எம்பிக்கள் கோரிக்கையை ஏற்று நேற்று உண்ணாவிரதம் முடித்துக்கொள்ளப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக எச்சரித்துள்ளனர்.காவிரியின் குறுக்கே கர்நாடகா அணைகள் கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை டெல்லி பாராளுமன்றம் முன் தமிழக விவசாயிகள் உண்ணாவிரதம் இருநந்தனர். திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்து முதல்நாள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினார். 2ம் நாள் உண்ணாவிரதத்தில் பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். 3வது நாளான நேற்று திமுக சார்பில் எம்.பிக்கள் கே.பி.ராமலிங்கம், தங்கவேல், காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பிக்கள் மணிசங்கர் அய்யர், சுதர்சன நாச்சியப்பன், மார்க்சிஸ்ட் சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் உண்ணாவிரத பந்தலுக்கு வந்து விவசாயிகளை வாழ்த்தி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ‘இது குறித்து நாடாளுமன்றத்தில் நாங்கள் பிரச்னை எழுப்புகிறோம். நீங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுங்கள்‘ என்று கேட்டுக்கொண்டனர்.
உண்ணாவிரத பந்தலுக்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘போராட்டத்தில் நானும் இணைந்து கொள்கிறேன். அதற்காகத்தான் இங்கு வந்துள்ளேன். கர்நாடக அரசுதான் மேகதாது அணைத்திட்டத்தை நிறைவேற்று வோம் என்று தன்னிச்சையாக கூறி வருகிறது. ஆனால் மத்திய அரசு இதுவரை இத்திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை. அவர்களாகவே தமிழகத்திற்கு எதிராக கருத்துக்களை பரப்பி வருவதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம். நதிநீர் கொள்கையில் இதுநாள் வரை எந்த அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறதோ அந்த முறையில் எந்த மாற்றத்தையும் மத்திய அரசு செய்யவில்லை எனவே விவசாயிகள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்ளவேண்டும்‘ என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் விவசாயிகளுக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.
உண்ணாவிரதம் இருக்க டெல்லி சென்ற விவசாயிகள் அனைவரும் இன்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு நாளை மறுதினம் சென்னை வந்து அங்கிருந்து பஸ் மூலம் மன்னார்குடி வருகின்றனர். அவர்களுக்கு மன்னார்குடியில் வரவேற்பு அளிக்கவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: உண்ணாவிரத பந்தலுக்கு வந்து வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். இங்கு வந்து வாழ்த்திய பலர், உச்சநீதிமன்றத்தை அணுகினால் தான் தீர்வு கிடைக்கும் என்றனர்.எனவே கர்நாடகம் அணை கட்டும் முயற்சியை தடுக்க உச்சநீதிமன்றத்தை நாடுவது தான் நல்ல முடிவாக இருக்கும் என கருதுகிறோம். ஊர் சென்றதும் இது குறித்து ஆலோசனை நடத்தி விரைவில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.