நாளை மறுநாள் இறுதி கட்ட தேர்தல் : ஜம்முகாஷ்மீர், ஜார்கண்டில் இன்று மாலை பிரசாரம் ஓய்வு
ஸ்ரீநகர்: காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை மறுநாள் இறுதி கட்ட தேர்தல் நடைபெறுவதையொட்டி, இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.காஷ்மீர் சட்டப்பேரவைக்கு கடந்த 25ம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 4 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (20ம் தேதி) நடைபெறுகிறது. 5ம் கட்டமாக பானி, பசோலி, கத்துவா, பிலாவர், ஹிரன்நகர், காந்தி நகர், ஜம்மு கிழக்கு மற்றும் மேற்கு, பிஸ்னாக், ஆர்.எஸ்.புரா, சுகேத்கார்க், மார்ஹ், ராய்பூர், டுமானா, அக்னூர், சாம்ப், நவ்ஷரா, தர்ஹல், ரஜவரி, கலகோட் ஆகிய 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.முதல் இரண்டு கட்ட தேர்தலில் 70 சதவீதத்துக்குமேல் வாக்கு சதவீதம் பதிவாகின. மூன்றாம் கட்டத்தேர்தலில் 58 சதவீதமும், 4ம் கட்டதேர்தலில் 49 சதவீத வாக்குகள் பதிவாகின. ராணுவ முகாம்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக வாக்கு சதவீதம் குறைந்து விட்டது.
5ம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், பாஜ, காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜ செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜவின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதேபோல் காங்கிரஸ், ஆளும் தேசிய ஜனநாயக கட்சி தலைவர்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இறுதி கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
ஜார்கண்ட் மாநிலத்திலும் நாளை மாறுநாள் இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ராஜ்மகால், பொய்ரோ, பர்கய்ட், லிடிபரா, பக்கூர், மகேஷ்பூர், சிக்கரிபரா, நலா, ஜம்தரா, தும்கா, ஜமா, ஜர்முன்டி, சரத், போர்யாகத், கோடா, மகாக்மா உள்ளிட்ட 18 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. பாஜ, காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடையே இங்கு பலத்த போட்டி நிலவுகிறது. கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இறுதி கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வருகிற 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.