ராமேஸ்வரம்: 24 மீனவர்களையும், 82 படகுகளையும் மீட்க இனியும் காலம் கடத்தினால் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்படும் என தமிழக கடலோர விசைபடகு மீனவர் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் போஸ் தெரிவித்தார்.இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 24 மீனவர்களை விடுதலை செய்யவும், இலங்கை வசம் உள்ள 82 படகுகளை மீட்க கோரியும் ராமேஸ்வரம், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த 22 மீனவ பிரதிநிதிகள் நேற்று சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், மீன்வளத்துறை செயலர் விஜயகுமார் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். அவர்களுடன் அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.இந்த சந்திப்பு குறித்து தமிழக கடலோர விசைபடகு மீனவர் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் போஸ் இன்று கூறியதாவது:
மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் ஜெயபால், மீன்வளத்துறை செயலர் விஜயபாஸ்கர், இயக்குனர் மற்றும் பாஜ தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களையும், படகுகளையும் மீட்க கோரி தமிழக அரசு பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தது. அதற்கு மத்திய அரசு இதுவரை பதில் அறிக்கையோ, அறிவிப்போ வெளியிடாமல் இருந்து வருகிறது. இலங்கையில் உள்ள 82 படகுகளில் 25 படகுகள் சேதமடைந்து கடலில் மூழ்கியுள்ளதாக சிறையில் இருந்து விடுதலையாகி வந்த மீனவர்கள் தெரிவித்தனர்.
படகுகளை மீட்க நாங்கள் ராமேஸ்வரத்தில் தொடர்ச்சியாக 20நாட்கள் போராட்டம் நடத்தினோம். அப்போது படகுகளை ஓரிரு நாளில் மீட்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் இதுவரை படகுகள் மீட்கப்படவில்லை. இதற்கிடையில் பொன்.ராதாகிருஷ்ணன் போன் மூலம் தொடர்புகொண்டு பேசிய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதுவரை நடவடிக்கை இல்லை.
சுனாமிக்கு முன்பு இலங்கை பறித்துக்கொண்ட 108 தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படாமல் வீணாகிவிட்டது. இதேபோல் தற்போது 82 படகுகளும் 4 மாதங்களுக்கு மேலாகியும் விடுவிக்கப்படாமல் உள்ளது. பாஜ தேர்தல் அறிக்கையில் மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்போம். மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும். படகுகளை மீட்டுத்தருவோம் என்றது. அந்த அறிக்கை வெறும் ஏட்டு சுரக்காய் ஆகிவிட்டது. இனியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்படும்.இவ்வாறு போஸ் கூறினார்.