ஓல்ஸ்டைன்: போலந்தை சேர்ந்த கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர், தனது காதலிக்கு வித்தியாசமான முறையில் செய்தி அனுப்பினார். நாயின் முதுகில் ஐ லவ் யூ என்று தையல் போட்டு அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டார். இதற்கு கண்டனங்கள் கிளம்பியதை தொடர்ந்து அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.போலந்து நாட்டின் வடகிழக்கே ஓல்ஸ்டைன் நகரில் வார்மியா மற்றும் மசூரி பல்கலைக்கழகம் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ கல்லூரியில் ஆன்ட்ரிஜ் கோன்சிக்கி என்ற மாணவர் படிக்கிறார். இவர் தன்னுடன் படிக்கும் காதலிக்கு வித்தியாசமான முறையில் காதலை தெரிவிக்க விரும்பினார்.
ஒரு நாயை பிடித்து, அதன் முதுகு மற்றும் வயிறு பகுதியில் ஆபரேஷன் மூலம் ஐ லவ் யூ என்று வார்த்தையை தையல் போட்டார். பிறகு, அந்த போட்டோவை பல்வேறு இணையதளங்களில் வெளியிட்டார். இந்த படத்தை மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் பெண் காதலியும் பார்த்தார். ஆன்ட்ரிஜ்ஜின் மனிதாபிமானற்ற செயலுக்கு பெண் காதலியும் அனைத்து மாணவர் பிரிவினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.காதலை வெளிப்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. அதை விடுத்து, ஒரு உயிரை துன்புறுத்தி காதலை வெளியிடுவது மிக கொடுமையானது.
மிருகவதை தடுப்பு சட்டத்துக்கு எதிரானது. கால்நடைகளைப் பற்றி படிக்கும் நாம், அவற்றை மதிக்க வேண்டும். இதற்கு பல்கலைக்கழகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் காதலியும் மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கினர்.இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தனது காதலிக்கு நாயின் வயிற்றில் ஐ லவ் யூ என்று தையல் போட்டு வெளிப்படுத்திய குற்றத்தை ஆன்ட்ரிஜ் கோன்சிக்கி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கிஉள்ளனர்.