பெங்களூர்: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க கோரும் அவசர மனுவையும் விசாரிக்க பெங்களூர் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால், ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனையுடன் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா உட்பட 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்கக்கோரியும், தண்டனையை ரத்து செய்யக்கோரியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ரத்னகலா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா தரப்பில் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜரானார். ஏற்கனவே இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானிசிங், ‘மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராக எனக்கு உத்தரவு எதுவும் கிடைக்கவில்லை. இந்த வழக்கிலும் என்னை கர்நாடக அரசு நியமித்துள்ளதாக மீடியாக்களில்தான் பார்த்தேன்‘‘ என்றார். இதையடுத்து, அரசு வழக்கறிஞர் இல்லாமல் மனு மீது விசாரணை நடத்தமுடியாது எனக் கூறி, விசாரணையை வரும் 6ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். இதைத் தொடர்ந்து, அதிமுக வக்கீல்கள், உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ஆர்.கே.தேசாயை சந்தித்து, ஜெயலலிதா ஜாமீனில் விடக் கோரி ஒரு அவசர மனுவை சமர்ப்பித்தனர். அவர், இது தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவிடம் ஆலோசித்தார்.
பின்னர், ஜெயலலிதாவின் அவசர கால சிறப்பு மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தேசாய் அறிவித்தார். அவசர மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நீதிபதி ரத்னகலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜரானார். அவருடன் 3 உதவி வழக்கறிஞர்களும் வந்திருந்தனர். அரசு உத்தரவு முறைப்படி வழங்கப்பட்டதையடுத்து அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராகியிருந்தார். பின்னர், ஜெயலலிதா வக்கீல் ராம்ஜெத்மலானி தனது வாதத்தை தொடங்கினார். ‘இது அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் இதை விசாரிக்க வேண்டும். இதற்காக நாங்கள் 2 நாளாக காத்திருக்கிறோம். ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை உடனடியாக ஜாமீனில் விட வேண்டும்’ என்றார்.
அப்போது, ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து பவானிசிங் ஒரு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, நீதிபதி ரத்னகலா கூறுகையில், ‘இந்த வழக்கை அவசர வழக்காக விடுமுறை கால நீதிமன்றத்தில் எடுத்து கொள்ள முடியாது. எனவே, வரும் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்’ என்றார்.ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமீன் மனு மற்றும் அப்பீல் மனுக்கள் 6ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே 6ம் தேதி பக்ரீத் என்பதால் விடுமுறை கர்நாடக அரசு நேற்றிரவு அறிவித்திருக்கிறது. எனவே, அவையும் 7ம் தேதியே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. இதனால், ஜெயலலிதா வரும் 7ம் தேதி வரை சிறைக்காவலில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.